எ-று. ‘நீல மணிமிடற் றொருவன் போல’ என்ற கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டுமென்பதாம். அதியர்கோமான்! அஞ்சி! நெல்லித்தீங்கனி எமக்கு ஈத்தாயாதலால், பெரும! நீ நீலமணிமிடற்றொருவன்போல மன்னுகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க. ‘பிறைநுதற் பொலிந்த சென்னி’ என்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னியெனினும் அமையும். (92)யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க் கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார் கடிமதி லரண்பல கடந்த நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) யாழோசைபோல இசையால் இன்பமும் செய்யா; காலத்தோடும் கூடியிரா; பொருளும் அறியவாரா; ஆயினும், தந்தையர்க்கு அருளுதல்வந்தன பிள்ளைகளுடைய இளஞ்சொல்; என்னுடைய வாயின்கட்சொல்லும் அத்தன்மையன, பகைவரது காவலையுடைத்தாகிய மதிலையுடைய அரண்பலவற்றையும் வென்ற நெடுமானஞ்சி! நீ அருளுதலால்-எ - று. புதல்வர்மழலை தந்தையர்க்கு அருள்வந்தன; அஞ்சி! நீ அருளுதலால், என் வாய்ச் சொல்லும் அன்னவெனக் கூட்டுக. யாழென்றது யாழிற் பிறந்த ஓசையை. பொருளுமென்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. (93) திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலு மாற்றார் வெடிபட் டோடன் மரீஇய பீடின் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய அருஞ்சமந் ததைய நூறிநீ பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. திணை - வாகை; துறை - அரசவாகை. அவன் பொருது புண்பட்டுநின்றோனை அவர் பாடியது. (இ-ள்.) திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழுமென்னும் ஓசையையுடைத்தாய் ஒலிப்ப மேற்சென்று போரைவெல்லுதல் இனி எங்கேயுள்ளது? நின்னோடு எதிர்ந்துவந்தோர், நினது தூசிப் |