திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) ஊரின்கட் சிறுபிள்ளைகள் தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட்படியும் பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம்? அவ்வாறே எங்களுக்குப் பெரும ! இனியை; மற்று அதனுடைய அணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம்? அதுபோலப் பெரும! நின்பகைவர்க்கு இன்னாய்-எ - று. கழாஅலினென்பதற்குக் கழுவப்படுதலாலெனினும் அமையும். (95) இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே. திணை - பாடாண்டிணை; துறை - வாண்மங்கலம். அவன் தூதுவிடத் தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக்கொட்டில் காட்ட அவர் பாடியது. (இ-ள்.) இவைதாம், பீலி அணியப்பட்டு மாலையைச் சூட்டப்பட்டு உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு நெய் யிடப்பட்டுக் காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன; அவைதாம், பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது பணிக் களரியாகிய (வேலைசெய்யும் கொட்டிலாகிய) குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும்; செல்வமுண்டாயின் உணவுகொடுத்து இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூடவுண்ணும் வறியோருடைய சுற்றத்திற்குத் தலைவனாகிய தலைமையையுடைய எம் வேந்தனுடைய கூரிய நுனியையுடைய வேல்-எ - று. பீலியணிந்தென்பது முதலாகிய வினையெச்சம் நான்கும் வியனகர வென்னும் குறிப்புவினையோடு முடிந்தன; இவற்றைச் செயவெனெச்சமாகத் திரிப்பினும் அமையும். 'சிதைந்து...........குற்றில' என்பது பழித்ததுபோலப் புகழ்ந்து கூறப்பட்டது. இவை வியனகர; வைந்நுதிவேலாகிய அவை கொற்றுறைக்குற்றி லிடத்தன வெனக் கூட்டுக. வினைக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்டது. இது கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு. (96) அலர்பூந் தும்பை யம்பகட்டு மார்பிற் றிரண்டுநீடு தடக்கை யென்னை யிளையோற் கிரண்டெழுந் தனவாற் பகையே யொன்றே பூப்போ லுண்கண் பசந்துதோ ணுணுகி நோக்கிய மகளிர்ப் பிணித்தன் றொன்றே விழவின் றாயினும் படுபதம் பிழையாது மையூன் மொசித்த வொக்கலொடு துறைநீர்க் கைமான் கொள்ளு மோவென உறையுண் முனியுமவன் செல் |