பத்துக் கன்று பெறுமோதான்? நின்னையும் நின்மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு இனிய முகத்தை ஒளியாது வெளிப்படுத்திக் காதலித்து நீ கொடுத்த தலைமையையுடைத்தாகிய யானையை யெண்ணின், நீ கொங்கரை மேல்கடற்கண்ணே ஓட்டப்பட்ட நாளில் அவர் புறக்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகடப்பட்ட வேலினும் பல-எ - று. தலைப்பெயர்த்திட்ட வேலென்ற கருத்து : படைக்கலமில்லாதாரை ஏதஞ்செய்வாரில்லையாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப் பட்ட வேலென்பதாம்; அன்றி, புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப் பிடித்தவேலென்பாரும் உளர். இதனால், கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு.
(131) மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை அவர் பாடியது. (இ-ள்.) முகிலினம் சென்று தங்கும் உயர்ந்தமலைக்குத் தலைவன், சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் வாய்த்த (வாய்த்த-தப்பாத) வாளினையுமுடைய அண்டிரனது மலையைப் பாடினவோ களிறுகளை மிகவுமுடைய இந்தக் கவினையுடைய காடு?- எ - று. யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டினும் அண்டிரனைப் பாடினோர், யானை மிகவுமுடையரென்று அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர்.
(132) முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே
பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே
நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை அவர் பாடியது. (இ-ள்.) யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைத்தேன் யான்; அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனதுள்ளம் அமிழ்ந்திப்போவதாக; அவனையன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக்கேட்ட எனது செவியும் பாழ்பட்ட ஊரின்கட் கிணறுபோலத் தூர்வதாக; நரந்தையையும் நறிய
|