கடங்கிய நரம்பினையுடைய வரிப்பொருண்மையோடு பயிலும் பாட்டு நிலந்தோறும் மாறிமாறி யொலிப்பப் படுமலைப்பாலை நிலைபெற்ற பயன்பொருந்திய சிறிய யாழைத் தளர்ந்த நெஞ்சத்துடனே ஒருமருங்கிலே அணைத்துக்கொண்டு புகழ்தற்கமைந்த தலைமையையுடைய நினது நல்லபுகழை நினைந்து வந்தேன், என்னுடைய இறைவா! யான்; எந்நாளும் மன்றத்தின்கண்வந்த பரிசிலரைக் காணிற் கன்றுடனே கறைபொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக்கொடுக்கும் மலையையுடைய நாடனே! மாவேளாகிய ஆயே! யாம் வேண்டியது யானையுமன்று; குதிரையுமன்று; விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற்பூட்டப்பட்ட தேருமன்று; பாணரும் புலவரும் கூத்தர் முதலாயினாருமாகிய அவர்கள் தம்முடைய பொருளென வளைத்துக்கொள்வாராயின் அதனை எம்முடையதென்று அவர்பால் நின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத் தெளியாதபயன் பொருந்திய உரிமையோடு கூடி மற்றும் அத்தன்மையவாக, நின்னுடைய வாழ்நாட்கள்; யான் வந்தது நின்னைக்காண்டல்வேண்டிய மாத்திரையே. பகைவரது மிக்க மாறுபாட்டைவென்ற வலியையுடைய, யாவரும் ஒப்பப் புகழும் நாட்டையுடையாய்-எ - று. நாடுகிழவோய்! யான் வந்தது களிறு முதலாயின வேண்டியன்று; நின்னைக் காண்டல்வேண்டிய அளவே; நின் ஊழி அன்னவாகவெனக் கூட்டுக. அல்லதூஉம், யானைமுதலாயினவன்றிப் பிறவற்றையும் பாணர் முதலாயினார் தமதெனத் தொடுக்குவராயினென இயைத்துரைப்பினும் அமையும். கொடுவரி : பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை; ஆகுபெயருமாம். இனி, 'ததைமெல்லொதுக்கின்' எனவும், 'வடிநவில்பனுவல்' எனவும், 'ஒளிறுநடைப்புரவிய' எனவும் பாடமோதுவாரும் உளர். வடிநவில் பனுவல் புலம்பெயர்த் திசைப்பவென்றுகொண்டு வடித்தல் பயின்ற பாட்டை இசைதோறும் பெயர்த்து வாசிக்கவென்றுரைப்பாரும் உளர். பொதுமீக்கூற்றம், பொதியிலுமாம்.
(136) யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்
திடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்த
பேஎற்பகையென வொன்றென்கோ
உண்ணாமையி னூன்வாடித்
தெண்ணீரிற் கண்மல்கிக்
கசிவுற்றவென் பல்கிளையொடு
பசியலைக்கும் பகையொன்றென்கோ
அன்னதன்மையு மறிந்தீயார்
நின்னதுதாவென நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற்
குரங்கன்னபுன் குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகையொன்றென்கோ
|