கண்ணுளங்கடும்பு சென்றது; சென்ற பின்றை அக்கடும்பாயினோர் தமது பாடலும் மறந்து ஆடலும் ஒல்லாராயினார்: அதற்குக் காரணம் பசியாராகன் மாறுகொலெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘நுண்பூண்' என்று பாடமோதுவாரும் உளர்.
(154)
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்த ரதுபோல்
அரச ருழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவ ரதனால்
யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன்
உற்றனெ னாதலி னுள்ளிவந் தனனே
ஈயென விரத்தலோ வரிதே நீயது
நல்கினு நல்கா யாயினும் வெல்போர்
எறிபடைக் கோடா வாண்மை யறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல விழிதரு மருவிநின்
கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே.
திணை - அது; துறை - பரிசிற்றுறை. (பாடாண்டிணை) கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது. (இ-ள்.) திரையலைக்கும் கடலினது கரைக்கண் அணியவிடத்தே போகினும் அறிவாரைக் காணின் நீர்வேட்கையினைத் தணிக்கும் சிறிய நீரைக் கேட்பர், உலகத்துமக்கள்; அதுபோல, வேந்தரிடத்தராகவும், குற்றந்தீர்ந்த வள்ளியோரை நினைத்துச் செல்வர், அறிவுடையோர்; அதனால், யானும் பெற்றதனைப் பயனாகக்கொண்டு பெற்றபொருள் சிறிதாயினும் இவன்செய்தது என்னென்று இகழேன், வறுமையுற்றேனாதலின்; நின்னை நினைத்து வந்தேன்; எனக்கு ஈயாயென்று இரத்தல் அரிது; நீ அப்பரிசிலைத் தரினும் தாராயாயினும் பூசலிடத்து எறியும் படைக்கலத்துக்குப் புறத்து அடியிடா ஆண்மையையும், துகிலினது தூயவிரியையொப்ப நெருங்கி உச்சியினின்றும் பலவாய் இழியும் குளிர்ந்த அருவியையுடைய நினது கொண்கானத்தையும் பாடல் எனக்கு எளிது - எ - று, புரைதப வென்று பாடமோதிப் புரைதபப் படர்குவரெனினும் அமையும். நீ அது நல்கினும் நல்காயாயினும் ஈயெனவிரத்தல் எனக்கு அரிது; நினது ஆண்மையும் கொண்பெருங்கானத்தையும் பாடல் எனக்கு எளிதெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.
(155)
வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக்
கிளக்கும் பாண கேளினி நயத்திற்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்
கிலம்படு புலவர் மண்டை விளங்குபு
|