திருநக ரெழிலுற வெய்தி இட்டிகைப் படுகாற் குட்டக் கோணத் துத்தர மருங்கி னத்தினஞ் சொரிந்த மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர்ப் பெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச் சேறுபடு செறுவி னாறுநடு கடைசியர் கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த எழிற்பூம் புன்னைப் பொழிற்புடை நிவந்த வள்ளிதழ்த் தாமரை வான்போ துளரி முழுத்திரட் டெங்கின் விழுக்குலை நெற்றி அகமடல் வதிந்த வன்புபுரி பேடை நரல்குர லோசை யளைஇ யயல கணைக்காற் கமுகி னிணைப்பொதி யவிழ்ந்த அம்மென் பாளையு ளசைந்த வண்டினம் மம்மர் வைகறை மருங்குதுயி லேற்ற அனந்தர் முரற்சி யளைஇப் புதைந்த பூங்கண் முற்றிய புறத்துப் புடை யாடித் தேங்கட் டும்பி தீங்குழ லிசைப்ப இயல்பிற் கெழீஇய வின்றுணைப் பிரிந்தோர்க் குயலரி தாக வூழூழ் கவற்றும் வயலுந் தோட்டமு மயல்பல கெழீஇய தாமரைச் செங்கட் டமனிய விணைக்குழைக் காமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த இளமரக் காவி னிணைதனக் கில்லாத் தூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி தமக்கிட மாக வமைத்த பின்றை வீழ்துணை மாதர் விளியுநினைந் திரங்கி வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன் உற்றவ னாருயி ருய்தல் வேண்டி இற்றவள் பிறந்துழிக் காட்டு மந்திரம் கற்றுவினை நவின்றனென் காட்டுவெ னினக்கென வஞ்ச மாயினு நெஞ்சுவலி யுறுக்கெனக் கண்கவர் பேரொளிக் காகதுண் டகனெனும் அந்த ணாளனை யமைச்சர் தருதலின் அருமதி யண்ணற் கவனிது கூறும் இருமதி யெல்லை யியைந்த விரதமொ டிரக்க மின்றி யிருக்கல் வேண்டும்

|