இஃது, உரிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை - புணர்தலும், பிரிதலும், இருத்தலும், இரங்கலும், ஊடலும் அவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள் - ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப் பொருளாம். பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. 'ஏனைய மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் ' (மரபு.110). என்னும் தந்திர உத்தியால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும் சிறுபான்மை எல்லாப்பொருளும், எல்லாத்திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும். இருத்தலாவது, தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல்; இரங்கலாவது ஆற்றமை; என்று என்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை. (16)
1. இவற்றின். (நச்சி.) 2. தேருங்காலை என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந் நிமித்தங்களும் உரித்தென்று ஆராய்ந்துணர்க.(நச்சி.) |