செய்யுளியல்

463புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத்
திறநிலை மூன்றுந்1 திண்ணிதில் தெரியின்
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
பண்புற முடியும் பாவின என்ப.
என் - னின். மேலனவற்றுட் சிலபொருட்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

புறநிலை வாழ்த்தும் வாயுறைவாழ்த்துஞ் செவியறிவுறூஉவும் மருட்பாவினால் வரப்பெறும் என்றவாறு.

எனவே மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறாதாயிற்று.

உதாரணம் வந்தவழிக் காண்க.

(151)

1. `திறநிலை மூன்று ' என்றான், முற்கூறியன எல்லாம் அகத்திணையாகலின். இவை புறத்திணையுள்ளல்லது வாரா என்றற்கென்பது. ` திண்ணிதிற்றெரியின் ' என்பது இவை மூன்றும் கைக்கிளை மருட்பாப் போல ஆண்பாற் கைக்கிளையும் பெண்பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒருதலையாகவே புறத்திணையென்று தெரியப்படுவன என்றவாறு. (தொல். பொருள். 473. பேரா.)