64களவியல்

தள்ளிய    என்றது :  தன்னாற்   சுட்டப்பட்ட   களம்   செவிலியால்
அறியப்பெற்றமையான்   அதனை   நீக்கிய நிலைமையை. தான் அதனைத்
தவிர்த்தமையைத்    தலைவன்    அறியானாதலின்     "தெருளாக்காலை"
என்றார்.
 

எ - டு :

விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்

தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்

அஞ்சிலை இடவ தாக வெஞ்செலற்

கணைவலந் தெரிந்து துணைபடர்த் துள்ளி

வருதல் வாய்வது வான்றோய் வெற்பன்

வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைக்

காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று

ஊசல் மாறிய மருங்கும் பாய்புடன்

ஆடா மையின் கலுழ்பில தேறி

நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலம்

கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை

மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்

குலவுப் பொறையிறுத்த கோற்றலை இருவிக்

கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து

பைதலன் பெயரலன் கொல்லோ ஐதேய்

கயவெள் ளருவி சூடிய உயர்வரைக்

கூஉங் கண்ணஃதெம் ஊர்என

ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே

(அகம்-38)
 

32) வழுவின்று    நிலைஇய    இயற்படு    பொருளினும்   என்பது :
தலைவன்பாற்   குற்றமின்றென   அவனது நிலைத்த இயல்புகளைக் கூறும்
பொருண்மைக் கண்ணும் என்றவாறு.
 

இது    தலைவியை    ஆற்றுவித்தல் வேண்டித் தோழி தலைவன்பாற்
குற்றத்தை   ஏற்றி   உரைக்குமிடத்து   அதனைத்   தலைவி  தன்வயின்
உரிமையும்    அவன்வயின்     அயன்மையும்    தோன்றக்    கூறலின்
''இயற்படுபொருள்" என்றார்.
 

எ - டு :

தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்

கொடுமை கூறின வாயினும் கொடுமை

நல்வரை நாடற் கில்லை தோழியென்

நெஞ்சிற் பிரிந்த தூஉம் இலரே

தாங்குறை நோக்கங் கடிந்ததூஉ மிலரே

நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே

(நச்-மேற்)
 

எனவரும்.