களவியல்65

33) பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக்
கண்ணும் என்பது : தலைவன் குறியிடத்து எய்தும் காலமும் வரும் நெறியும்
ஒத்தமைதலின்மையான்  மனனழிவு  மேலும்  மேலும்  சேர்ந்த சிந்தையுற்ற
விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்க என்றோளே அன்னை எனநீ

சொல்லின் எவனோ தோழி கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த

குறுங்கை இரும்புலிக் கொலைவல் ஏற்றை

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி

சாரல் நாட வாரலோ எனவே

(குறு-141)
 

34. காமஞ்   சிறப்பினும்   என்பது :   தலைவனைக்  கூடுதற்கு அவா
மிக்குழியும்  என்றவாறு.  அவ்வழிப்  பெரும்படர்   கூர்ந்து  மொழிதலின்
இதனைக் காமமிக்க கழிபடர் கிளவி என்ப.
  

எ - டு :

கொடுந்தாள் அலவ குறையாம் இரப்போம்

ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன்-நெடுந்தேர்

கடந்த வழியைஎம் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ

(ஐந்-ஐங்-42)
 

35. அவனளி   சிறப்பினும்   என்பது :   வேட்கை   மீதூரப்  பெற்ற
தலைவனது தண்ணளி அளவு இகந்த விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி

வான மீனின் வயின்வயின் இமைக்கும்

ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்

உள்ளின் உள்நோய் மல்கும்

புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்

(குறு-150)
 

36) ஏமஞ்சான்ற   உவகைக்   கண்ணும் என்பது : களவின் பயனாகிய
கற்பொழுக்கத்திற்கு  விளக்கமாகிய  வரைதலைத்  தலைவன் முயலுமிடத்து
அஃது  இருவருக்கும் ஏமமாதலின்  அவ்  ஏமத்தான்  மிக்க  மகிழ்ச்சியின்
கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்தி

கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்

சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை

பொருந்தினார்க் கேமாப் புடைத்து.

(ஐந்-எழு. 12)