33) பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் என்பது : தலைவன் குறியிடத்து எய்தும் காலமும் வரும் நெறியும் ஒத்தமைதலின்மையான் மனனழிவு மேலும் மேலும் சேர்ந்த சிந்தையுற்ற விடத்தும் என்றவாறு. |
| எ - டு : | வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் |
| செல்க என்றோளே அன்னை எனநீ |
| சொல்லின் எவனோ தோழி கொல்லை |
| நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த |
| குறுங்கை இரும்புலிக் கொலைவல் ஏற்றை |
| பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
| ஆரிருள் நடுநாள் வருதி |
| சாரல் நாட வாரலோ எனவே |
(குறு-141) |
34. காமஞ் சிறப்பினும் என்பது : தலைவனைக் கூடுதற்கு அவா மிக்குழியும் என்றவாறு. அவ்வழிப் பெரும்படர் கூர்ந்து மொழிதலின் இதனைக் காமமிக்க கழிபடர் கிளவி என்ப. |
| எ - டு : | கொடுந்தாள் அலவ குறையாம் இரப்போம் |
| ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன்-நெடுந்தேர் |
| கடந்த வழியைஎம் கண்ணாரக் காண |
| நடந்து சிதையாதி நீ |
(ஐந்-ஐங்-42) |
35. அவனளி சிறப்பினும் என்பது : வேட்கை மீதூரப் பெற்ற தலைவனது தண்ணளி அளவு இகந்த விடத்தும் என்றவாறு. |
| எ - டு : | சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி |
| வான மீனின் வயின்வயின் இமைக்கும் |
| ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம் |
| உள்ளின் உள்நோய் மல்கும் |
| புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய் |
(குறு-150) |
36) ஏமஞ்சான்ற உவகைக் கண்ணும் என்பது : களவின் பயனாகிய கற்பொழுக்கத்திற்கு விளக்கமாகிய வரைதலைத் தலைவன் முயலுமிடத்து அஃது இருவருக்கும் ஏமமாதலின் அவ் ஏமத்தான் மிக்க மகிழ்ச்சியின் கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்தி |
| கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும் |
| சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை |
| பொருந்தினார்க் கேமாப் புடைத்து. |
(ஐந்-எழு. 12) |