66களவியல்

37) தன்வயின் உரிமையும் அவன் வயிற்பரத்தையும் அன்னவும் உளவே
ஓரிடத்தான என்பது : மறைந்தவற்காண்டல் முதலாகக் கூறிய  கிளவிகளுள்
கூற்றுமொழிக்கண்  ஒரோவிடத்துத்  தான்  தலைவற்குரிய  மனைக்கிழத்தி
என்னும் உணர்வானே  தனது  உரிமையும்,  வரையாமல்  களவு நெறியான்
ஒழுகுதலின்   தலைவன்கண்    அயன்மையும்    தோன்றக்     கூறலும்,
அவைபோல்வனவாகிய பிறவும் தலைவி கூற்றாதற்கு உளவாகும் என்றவாறு.
தலைவி கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.
 

வழுவின்றி  நிலைஇய இயற்படு பொருள் முதலாகிய ஐந்தும் தன் வயின்
உரிமையும் அவன் வயின் பரத்தைமையும் விளங்கக் கூறும். ஏனையவற்றுள்
ஒரோவழி   அவை  தோன்றக்  கூறும்  என்க.  பரத்தைமை = அயன்மை
பரத்தைமையும் என்பது செய்யுள் விகாரத்தான் பரத்தையும் என நின்றது.
 

இனிப் 'பரத்தை' என்பதற்குக் கற்பிற்குரிய  பிரிவாகிய  ஒழுக்கம் எனப்
பொருள்  கொண்டு  நச்சினார்க்கினியர் வலிந்து  கூறும்  விளக்கம்  தமிழ்
மரபிற்கும் சூத்திர நோக்கிற்கும் ஒவ்வாமையை ஓர்ந்துணர்க.
 

அன்னபிறவும்  என்பதனான்  தலைவி   இரவுக்குறி  நயந்துரைத்தலும்
குறியிடத்து எதிர்ப்பட்டவழிக் கூறலும், பின்னர் விதந்து கூறும்  கூற்றுக்கள்
அல்லாமல்   சான்றோர்  செய்யுட்களுள்  வேறுபட  வருவனவும் எல்லாம்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.
 

சூ. 114 :

 வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்

வரையா நாளிடை வந்தோன் முட்டினும்

உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்

தானே கூறும் காலமும் உளவே

(22)
 
க - து :

மேற்கூறியனவேயன்றிப்  பிறவாறு வரும் தலைவி கூற்று ஆமாறு
கூறுகின்றது.
 

பொருள் :1) வரைவிடை   வைத்த   காலத்து  வருந்தினும் என்பது :
தலைவன் வரைபொருட்குப் பிரிந்தவழி  அவன்  குறித்துச்  சொன்ன நாள்
கடந்த காலத்து, அதனை எண்ணி வருந்துமிடத்தும் என்றவாறு. இது பாலது
ஆணையான் எதிர்ப்பட்டுக்  குறிப்பறிந்து  உள்ளப்  புணர்ச்சி அளவானே
ஒழுகி  வரைவிடை  வைத்துப் பிரியுங்கால் இன்ன நாளில்  வருவேன் என
வன்புறை கூறிச் சென்ற தலைவன் அந்நாளின்கண் வாராமற்