76களவியல்
எ - டு :

யாஅங் கொன்ற மாஞ்சுட் டியவிற்

கரும்புமருள் முதல பைந்தாட் செந்தினை

மடப்பிடி தடக்கை யன்ன பால்வார்பு

கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோற் பெருங்குரல்

படுகிளி கடிகம் சேறும் அடுபோர்

எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து

ஆரம் நாறும் மார்பினை

வாரற்க தில்ல வருகுவள் யாயே

(குறு-198)
 

உரைத்துழிக்   கூட்டமொடு   எஞ்சாது  கிளந்த இருநான்கு கிளவியும்
என்பது : அங்ஙனம் அச்சுறுத்திக் கூறிய வழி ஆற்றாது மெலிந்து  நிற்கும்
தலைவன் தலைவியைக் கூடுதற்காகும் செவ்வியறிவித்தலொடு  குறைவின்றிக்
கிளந்த   இவ்   எட்டுக்  கிளவிகளும்  என்றவாறு. இவை எட்டும் தோழி
மதியுடம்பாட்டினுள் குறையுறவுணர்தல்   என்னும்   வகையாம்   என்பது
விளங்கத் தொகை கொடுத்தார் என்க.
 

தலைவன்   இரந்து   குறையுறுமிடத்துப் பலவாறாக நிகழ்வனவெல்லாம்
இவ்எட்டனுள் அடங்கும் என்பது புலப்பட "எஞ்சாது   கிளர்ந்த"  என்றார்.
எடுத்துக்காட்டுக்கள்  தொகையுள்ளும்   பிற  சான்றோர்  செய்யுளுள்ளும்
கண்டுகொள்க.
 

9) மாயஞ்செப்பி   வந்த   கிழவனைப்  பொறுத்த   காரணம்  குறித்த
காலையும் என்பது : பொய்யான  காரணங்களைச்  செப்பி  வந்து  நிற்கும்
அவன் கூற்றினையும் குறிப்பினையும் மறுத்துரையாமல் தலைவி  பொறுத்து
நிற்கும் காரணத்தை ஓர்ந்துணர்ந்த விடத்தும் என்றவாறு.
 

அஃதாவது   தலைவியும்    தோழியும்   ஒருங்கிருந்த   செவ்விக்கண்
கையுறையொடு வந்த தலைவன் இவ்வழியே என்னான் வேட்ட முறப்பட்ட
மான் போந்ததோ? புண் கூர்ந்ததொரு யானை போந்ததோ  எனவும்,  நும்
ஊர் யாது? பேர் யாது? எனவும் வினாதற்கண் தலைவி யாதொரு மாற்றமும்
உரையாமல், அவனது முன்னிலையை  மறுக்காமல்   பொறுத்திருத்தலையும்
கண்ணினாற் குறிப்புணர்த்தலையும் நோக்கித் தலைவியது களவொழுக்கத்தை
உணர்ந்து தோழி கூற்று நிகழ்த்தும்  என்றவாறு.  மாயஞ்  செப்பலாவது =
இல்லது புனைந்து கூறல். குறித்தல் = ஓர்ந்துணர்தல்.
 

எ - டு :

வேங்கை மலரும் வெறிகமழ் தண்சிலம்பில்

வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேம்