78களவியல்

படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்

கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனிநீ

நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே

பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி

அல்கறைக் கொண்டூண் அமலைச் சிறுகுடி

நல்கூர்ந்தார் செல்வமகள்

நீயே வளியின் இகல்மிகு தேரும் களிறும்

தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு

அளியொடு கைதூவலை

அதனால்

கடுமா கடவுறூஉம் கோல்போல் எனைத்தும்

கொடுமை இலையா வதறிந்தும் அடுப்பல்

வழைவளர் சாரல் வருடை நன்மான்

குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி

உழையிற் பிரியின் பிரியும்

இழையணி அல்குல் என்தோழியது கவினே"
 

எனத் தலைவியது நிலையை உணர்த்தித் தலைவனைப் பணிந்து கூறியவாறு
காண்க.
 

இதற்கு   மெய்யுற்றுக்   கூடிய கூட்டத்திற்குப்பின் என உரை கூறுவார
நச்சினார்க்கினியர். அங்ஙனம் கொள்ளின் பின்வரும் குறைந்தவட் படரினும்
மறைந்தவ ளருகத் தன்னொடும்  அவளொடும்   முன்னம்   மூன்றளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்   என்னும்  கிளவிகள்   பயனில்
கூற்றாக முடியுமென்க. மற்றுக் கூட்டம்  எவ்வழி  நிகழுமெனின்? நன்னயம்
பெற்றுழி நயம்புரி இடத்தினும் என்பதன் பின்னிகழும் என்க.
 

11) குறைந்தவட்படரினும்   என்பது :  இரந்து  பின்னின்ற  தலைவனது
குறை முடித்தற்   பொருட்டுத்   தலைவியிடத்துத்   தான் குறையுறுதற்குச்
செல்லுதற்   கண்ணும்   என்றவாறு.   குறைந்து   என்றது குறையுறுதலை
உட்கொண்டு என்றவாறாகும். இதற்கு இதுவே பொருளாதலைக் 'குறையுற்று'
என இளம்பூரணர் கூறுமாற்றானறிக.
 

எ - டு :

வளையணி முன்கை வாளெயிற் றின்னகை

இளைய ராடும் தளையவிழ் கானல்

விருந்தென வினவி நின்ற

நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே

(ஐங்-198)
 

12) மறைந்தவளருகத் தன்னொடும் அவளொடும் முன்னம் மூன்றளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்