இங்ஙனம் பகற்குறி, இரவுக்குறி பற்றி வருவனவெல்லாம் இதன்கண் அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க. |
16) வேண்டாப் பிரிவினும் என்பது : தலைவன் தன் உள்ளத்தால் விரும்பாது கடமை பற்றிப் பிரிதலைக் கூறிய விடத்தும் என்றவாறு. அஃதாவது ஒருவழித்தணத்தலும், துணைவயிற்சேறலும் காவற்குப் பிரிதலுமாம். தலைவன் இவற்றை விரும்பிப் பிரிதலின்மையான் "வேண்டாப் பிரிவினும்" என்றார். இது தலைவன் கூற்றுள் இட்டுப் பிரிவிரங்கினும் என ஓதப்பட்டது. |
| எ - டு : | இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல் |
| சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை |
| பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புதிர்பு |
| நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி |
| விழவுக் களங்கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப |
| இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் |
| செலீஇய சேறி யாயின் இவளே |
| வருவை யாகிய சின்னாள் |
| வாழ்வா ளாதல் அறிந்தனை சென்மே |
| (நற்-19) |
சாரற்பலவின் (ஐங்-214) என்னும் ஐங்குறுநூறும் அது. |
17) வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் என்பது : தலைவி விருந்தோம்புதலாகிய பேரொழுக்கத்தை விரும்பிய காலையும் என்றவாறு. இது "வேளாண் எதிரும் விருப்பினானும்" எனத்தலைவி கூற்றுள் ஓதப்பட்ட கிளவியைச் சார்ந்தாகும். |
| எ - டு : | 'நிலாவினிலங்கும்' என்னும் அகப்பாட்டினுள் |
| சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் |
| எம்வரை அளவையிற் பெட்குவம் |
| நும்மொப் பதுவோ மேவரிது எமக்கே |
| (அகம்-200) |
என வந்தவாறு கண்டுகொள்க. "நெடுவேள் மார்பின்" என்னும் அகப்பாட்டும், "பன்னாளெவ்வந்தீர" என்னும் அகப்பாட்டும் அது. |
18) புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது : தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கி நின்ற தோழி கூட்டத்தின் பின் மீண்டு வரும் தலைவனது கூட்டத்தை உணர்ந்தவளாயினும் அறியாதாள் போலச் சிறந்தொழுகுமிடத்தும் என்றவாறு. |