90களவியல்

அம்ம வாழி தோழி பன்மலர் 

       

நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை 

குன்றம் பாடா னாயின் 

என்பயம் செய்யுமோ வேலற்கு வெறியே  

(ஐங்-244)
 

இது தலைவிக்கு   உரைப்பாள் போன்று  வேலன்  மேல் வைத்துக் கூறிக்
காட்டியது.
 

நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் 

கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் 

அருந்திறற் கடவுள் அல்லன் 

பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே. 

(ஐங்-182)

இது வேலற்குக் கூறிக் காட்டியது.
 

கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த 

பறியாக் குவளை மலரொடு காந்தட் 

குருதி யொண்பூ உருகெழக் கட்டிப் 

பெருவரை யடுக்கம் பொற்பக் குறமகள் 

அருவி இன்னியத் தாடும் நாடன் 

மார்புதர வந்த படர்மலி யருநோய் 

நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து 

கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி 

வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் 

கடவு ளாயினும் ஆக 

மடவை மன்ற வாழிய முருகே 

(நற்-34)
 

இது முருகற்குக் கூறிக் காட்டியது.
 

28) பிறன்   வரைவு   ஆயினும்   என்பது :   நொதுமலர்    வரைவு
வேண்டியவழித் தமர் அதனை ஆராய முற்பட்ட  விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

இன்றுயாண் டையனோ தோழி குன்றத்துப் 

பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் 

கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன் 

அறிவுகாழ்க் கொள்ளு மளவைச், செறிதொடி 

எம்மில் வருகுவை நீயெனப் 

பொம்மல் ஓதி நீவி யோனே 

(குறு-379)
 

இது தாய் கேட்பத் தலைவியிடத்துக் கூறியது.
  

29) அவன்   வரைவு   மறுப்பினும்  என்பது : தலைவன் தமர் வரைவு
வேண்டிய வழித் தலைவியின் தமர் அதனை மறுத்தவிடத்தும் என்றவாறு.