நூ. 99 : ஒவ்வொரு நூற்பாவின் கருத்தினையும் தெளிவாக நூற்பாவை அடுத்து விளக்கிக் கூறிய உரைத்திறன் முன்னைய உரைகளைவிட இவ்வுரையில் சிறப்பாக அமைந்திருத்தலை நூன்முழுதுங் காணலாம். |
நூ. 100 : மடன் என்பதற்குப் பண்டை உரையாளர் கூறும் பொருள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பேதைமை, பொறை என்பவற்றின் விளக்கம் புதுமையாக உள்ளது. தலைவன் தலைவியரின் இப்பண்புகள் களவினும் கற்பினும் பல இடங்களில் சுருங்கி வருதலை உட்கொண்டு பண்டை உரையாசிரியன்மார் கொடுத்துள்ள விளக்கங்கள் புறக்கணிக்கத் தக்கவையல்ல என்பது தோன்றுகின்றது. |
நூ. 101: புணர்ச்சியின் பின் தணிந்து தீரும் கைக்கிளை, பெருந்திணை வேட்கை போலாது ஐந்திணைத் தலைவன் தலைவியரின் வேட்கை புணராத முன்னும் புணர்ந்த பின்னும் ஒருதன்மைத்தாகி நிலைபெறும் வேட்கையாதலின் ஒருதலை வேட்கை என்று நச்சினார்க்கினியர் ஒருதலை என்பதனை வேட்கையொடும் இணைத்துப்பொருள் கொண்ட நுட்பம் சுட்டி உணரத்தக்கது. ஆக்கஞ்செப்பல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் என்பவற்றிற்கு இவர் குறிப்பிடும் பொருள் விளக்கங்கள் புதியனவும் பொருத்தமானவும் ஆம். 'மரபினவை களவு எனமொழிப' என்பதன் விளக்கம் நன்று. |
இவ்வொன்பது உணர்வுகளுக்கும் தலைமக்கள் கூற்றிற்கு உரியனவாகப் பின்னர்க் கூறப்படும் கிளவிகளைப் பொருத்திக் காட்டியுள்ள திறன் போற்றற்குரியது. எடுத்துக்காட்டுக்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. |
நூ. 102 : நூற்பாவில் கூறுவோர் கேட்போர் இடன் என்பன இன்மையின் எந்த வரிசையிலும் அடங்காத வகையில் முன்னர் நிகழ்வனவற்றைப் பின்னரும் பின்னர் நிகழ்வனவற்றை முன்னரும் அமைத்துச் சொற்றொடர் அமைப்பால் தாம் விரும்பியவாறு கருத்து வகையை முன்னர் விளக்கிப் பின் உரை வரைந்துள்ளார். முன்னிலையாக்கல், தம்நிலையுரைத்தல் முதலிய சொற்றொடர்களுக்கு வரையப்பட்டுள்ள புதியவுரை, தெளிவகப்படுத்தல் - நகைநனி யுறாஅ அந்நிலை யறிதல் என்பன இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னும் அதன் பின்னும் நிகழ்வன. ஏனையவும் அதனை ஒட்டியவையே என அவற்றைப் பொருத்திக் கூறிய திறம், இவற்றைத் தலைவி, தோழி என்பவர்களுக்கும் உரியனவாகக் |