கூறுதல் யாவும் ஆராயத்தக்கன. இக்களவொழுக்கம் வேட்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆதலின் நன்னயம் என்பது திரிதல் இல்லாத காதல் என்னும் பொருளிலேயே சிறப்பது. நயம் என்பதற்கு அறத்தாறு எனப் பொருள் கூறி அது மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாட்டுப் பொருளது என்ற கருத்தின் பொருத்தமும் ஆய்விற்குரியது. |
நூ. 103: களவியலுள் கூறுவன பிரிவுபற்றிய ஒழுக்க மல்லாத ஏனைய ஒழுகலாறுகளே என்ற கருத்து மிகச்சிறப்பானது. 'வல்லேபெற்றுழி' என்ற சொற்றொடரின் பொருள் நயம் இனிது. இயற்கைப் புணர்ச்சி ஒன்றாகவே ஒருவழியே நிகழும். இடந்தலைப்பாடு என்ற இரண்டாவது கூட்டம் ஒருமுறையோ சில முறையோ நிகழலாம். அவ்வாறே பாங்கற் கூட்டம், தோழியிற் புணர்வு என்பன ஒருமுறைக்குமேல் நிகழினும் ஒரு கூறாகக் கொள்ளப்படும் என்று குறிப்பிடும் செய்தி முந்நாளல்லது துணையின்றி கழியாது (124) என்ற நூற்பாவுக்கு வரைந்துள்ள உரையோடு இணைத்து நோக்கும்போது பொருந்துவதாக இல்லை. |
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - என்பதன் உரை வலிந்துரையாதல் தேற்றம். |
தலைவியை முன்னர் அறியாத பாங்கன் தலைவனால் இவ்விடத்தாள் இவ்வியல்பினாள் என்று உணர்த்தப்பட உணர்ந்து அவன் குறிப்பிட்ட இடத்தில் அவள் இருத்தலை அறிந்து வந்து கூறுபவனே. தலைவி இருக்குமிடமறிந்து வந்து கூறுதல் என்பது பாங்கனுக்கு இயலக் கூடியதன்று. இடந்தலைப்பாடு என்பது இயற்கைப் புணர்ச்சியை நிகழ்த்திய இடத்தைத் தலைப்பட்டுக் கூடுதல் என்று பொருள்படுவது போலப் பாங்கற் கூட்டம் பாங்கனைக் கூடிச் செய்தியைத் தெரிவித்தபின் கூடிய கூட்டம் என்ற விளக்கப் பெறுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பாங்கனிற் கூட்டம் என்று சொற்றொடரை அமைக்காமல் பாங்கற் கூட்டம் என இரண்டன் தொகையாகச் சொற்றொடர் அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது. பாங்கனால் இடந்தலைப்படுதல் என்று 31, 38 ஆம் பக்கங்களில் குறிப்பிடும் இவர் தோழியால் இடந்தலைப்படுதல் என்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே தலைவன் தானே இடந்தலைப் படுதலை இடந்தலைப்பாடு எனவும் பாங்கனிடம் அறிவித்தபின் இடந்தலைப்படுவதைப் பாங்கற் கூட்டம் எனவும் முன்னையோர் பெயரிட்டிருக்கலாம் என்பது தோன்றுகின்றது. தலைவி ஆடிடத்தில் |