| சூ. 126 : | ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் |
| தாய்எனப் படுவோள் செவிலி யாகும் |
(34) |
| க - து : | அகப்பொருள் ஒழுக்கத்தின்கண் அடையடாது வரும் 'தாய்' என்னும் முறைப் பெயர் பற்றியதொரு மரபுணர்த்துகின்றது. |
பொருள் :ஆய்ந்தறிந்து உணர்த்தத் தகும் சிறப்பினையுடைய அரிய மறைப்பொருள்களை யெல்லாம் குறிப்பானேயன்றிக் கூற்றானே கிளந்து கூறுதலின் தாய் எனச் சிறப்பித்துக் கூறப் பெறுபவள் செவிலியாவாள். |
நற்றாய், செவிலித்தாய், கைத்தாய், ஊட்டுத்தாய், தொல்தாய், சிற்றாய் எனத் தாய்எனற் குரியார் பலராகலின், நல், முதலிய அடையின்றியும் பிற சார்பின்றியும் வாளா 'தாய்' என வருமிடத்துக் கவர்பொருள்படுதலை நீக்கலும், செவிலியின் சிறப்பினை வற்புறுத்தலும் இதன் பயன் என்க. |
இது முதலாய மூன்று சூத்திரங்களும் பொருளியலுள் கூறற்குரியவை. எனினும் செவிலியும் தோழியும் களவிற்கு இன்றியமையாச் சிறப்புடையராய் அறத்தொடு நின்று களவினை வெளிப்படுத்தித் தலைமக்களைக் கற்பின்கண் செலுத்தும் கிழமையுடையராகத் திகழும் இயைபு நோக்கி ஈண்டுக் கூறப்பெற்றன. |
| சூ. 127 : | தோழி தானே செவிலி மகளே |
(35) |
| க - து : | ஒன்றித் தோன்றும் தோழி பற்றியதொரு விளக்கங் கூறுகின்றது. |
பொருள் :தலைவியொடு தோழமை பூண்டொழுகும் ஆயத்தார் பலராயினும் அவருள் கிளந்து கூறப்பெறும் தோழியாவாள் செவிலியீன்ற மகளாவாள். தானே என்பதனுள் ஏகாரம் பிரிநிலை. தான், ஈற்றேகாரம் இரண்டும் இசைநிறை. |
சூ. 128 : | சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே |
(36) |
க - து : | செவிலி மகளாகிய தோழி சிறத்தற்குக் காரணம் கூறுமுகத்தான் அவட்குரிய தோரிலக்கணங் கூறுகின்றது. |
பொருள் : செவிலி மகளாகிய தோழி கிழவன், கிழத்தி ஆகிய இருவரது நிலைமைகளை ஆய்ந்துணர்தலும் கிழத்திக்கு உசாத்துணையாதலும் ஆகிய தன்மைகளான் பொலிவுற்றுத் திகழ்வாள். |
பொதுப்படக் கூறியதனான் சிறுபான்மை செவிலிக்கும் தலைவற்கும் உசாத்துணையாதலும் கொள்க. |