வழங்கலும் ஆகிய கடப்பாடு பற்றிப் பொழுது இடையிட்டுப் பிரிந்து வந்த காலத்துத் துனியுற்றிருந்த தலைவி வாயிலார் வேண்ட வாயில் நேர்ந்து ஊடல் தவிர்ந்து ஒழுகுமிடத்துத் தலைவனது பெருமை மிகுதலின், மகிழ்ந்து கூற்று நிகழ்த்தும் என்றவாறு. |
அப்பெருமை தலைவியான் வருதலின் "தன்னின் ஆகிய தகுதி" என்றார். பரத்தையர் எள்ளியுரையாதவாறு ஊடல் தவிர்ந்து தலைவனை ஏற்று ஒழுகிய உயர்வு 'தகுதி' எனப் பட்டது. |
இக்கிளவிக்குரிய ஒழுகலாறு தலைவி கருவுற்றிருக்கும் காலத்து நிகழ்வதாகும். தலைவி ஊடல் தவிர்ந்து அருளுதற்கு அஃது ஏதுவாகும் என்க. மேல் வரும் கிளவியும் இதனைப் புலப்படுத்தும். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
15) புதல்வற் பயந்த புனிறுநீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும் என்பது : தலைவி புதல்வனை ஈன்ற புனிறு தீர்ந்தகாலை நெய் பூசி நீராடி வாலாமை போக்கி விளங்குமிடத்து அவளைக் குறித்துத் தலைமைப் பாடுடைய மேலோர் பாலும், தேவரைக் கருதியும் செய்யும் பெரிய விழாக்கள் காரணமாக ஈன்றணிமைக் காலத்துப் பிரிந்திருந்த தலைவன் வந்து சேருமிடத்தும் என்றவாறு. |
சிறப்பாவது, புதல்வனை ஏந்தி வாழ்த்தலும், பெயரிடலும், ஐம்படைத் தாலி அணிவித்தலும், அவ்வழித் தேவர்க்குப் பூசனை புரிதலும் இரவலர்க்குப் பரிசில் வழங்கலும் பிறவுமாம். புனிறு = மகவை ஈன்றதனான் உடம்பு எய்திய நொய்ம்மை. |
| எ - டு : | வாராய் பாண நகுகம் நேரிழை |
| கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி |
| நெய்யொ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் |
| விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் |
| புதல்வனை ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் |
| திதலை யல்குல் முதுபெண் டாகித் |
| துஞ்சுதி யோமெல் லஞ்சில் ஓதியெனப் |
| பன்மா ணகட்டிற் குவளை யொற்றி |
| உள்ளினென் உள்ளுறை எற்கண்டு மெல்ல |
| முகைநாண் முறுவல் ஒன்றித் |
| தகைமல ருண்கண் கைபுதைத் ததுவே |
| (நற்-370) |
இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது. |