126கற்பியல்

குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை

குடம்நிறை தீம்பால் படூஉம் ஊர

புதல்வனை ஈன்றிவள் நெய்யாடினளே

 

இது புதல்வன் பிறந்தமை காணத் தலைவன் வந்தமையைத் தோழி கூறியது.
பிறவும் சான்றோர் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க.
 

16) பயங்கெழு துணையணைப்   புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த
கிழத்தியைக் குறுகி அல்கல்   முன்னிய   நிறையழி பொழுதின் மெல்லென்
சீறடிப்   புல்லிய   இரவினும்   என்பது :   தழுவிக்கோடலாகிய   பயன்
பொருந்துமளவினதாகிய பஞ்சின்   மெல்லணையைப் புல்லித் தலைவனைப்
புல்லப் பெறாதே   வருந்தினளாகிக்     கிடந்த   தலைவியை   அணுகித்
தங்குதலைக் கருதி நிறையழிந்த  காலத்து   அவளது   மெத்தென்ற சிறிய
பாதங்களை அணைத்து இரந்து நிற்குமிடத்தும் என்றவாறு.
 

தலைவி வாலாமையுற்றிருந்த  காலத்துத்   தான்   பிரிந்திருந்து புரிந்த
குறையைக் கருதியவழி நிறையழிவு  நேர்தல்   இயல்பு   என்பது  விளங்க
"நிறையழி பொழுதின்" என்றார். இரவினும் என்றது இரந்து நிற்றற் கண்ணும்
என்றவாறு.
 

என்னை நீ செய்யினும் உணர்ந்தீவா ரில்வழி

முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன்

(மருதக்கலி)
 

எனத்தலைவன் சீறடிப் புல்லி  யிரந்தமையைத் தலைவி கூறியவாறு காண்க.
தலைவன் கூற்று வந்துழிக் கொள்க.
 

17) உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் பிறபிற பெண்டிரிற்
பெயர்த்தற் கண்ணும் என்பது :   அங்ஙனம்   இரந்தவிடத்தும்    தீராது ஊடலைத் தலைவி மிகுத்தவழி அவளைக்கூடுதல்  அருமையுடைத்தாகலின்,
உணர்த்த உணர்ந்த பிறபிற மகளிரின்   வரலாறுகளைக்   கூறிப் புலவியை
மாற்றுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

"ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று

வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன்

தண்டா ரகலம் புகும்" எனக்கூறி

. . . . .

நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்

தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்

ஆனா விருப்போ டணியயர்பு காமற்கு

வேனில் விருந்தெதிர் கொண்டு"

 

எனத் தலைவிக்குணர்த்தியவாறு : பிறவும் வந்துழிக் கொள்க.