130கற்பியல்

போவோமோ     தவிர்வோமோ   எனத்     தானே   வருந்துதலும்,
செலவழுங்குதலாக நெஞ்சிற்குக் கூறுதலும், தலைவியை   ஐயுற   வேண்டா
எனக் கூறலும் பிறவுமாக அலக்கணுறுதலின் 'விழுமம்' என்றார்.
 

எ - டு :

உயிரினும் சிறந்த ஓண்பொருள் தருமார் 

நன்றுபுரி காட்சியர் சென்றனர் அவர்என 

மனைவலித் தொழியும் மதுகைய ளாதல் 

நீநற் கறிந்தனை யாயின் நீங்கி 

மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் 

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் 

கல்நெடுங் கவலைய கானம் நீந்தி 

அம்மா அரிவை ஒழிய 

சென்மோ நெஞ்சம் வாரலன் யானே.  

(அக-245)
 

இது நெஞ்சிற்குக் கூறியது. இதன்கண் உயிரினும்  சிறந்த  ஒண்பொருள்
என்றமையானும் நன்றுபுரி     காட்சியர்   என்றதனானும்   இஃது   ஓதற்
பிரிவென்பதும் கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல்நெடுங்கவலை
என்றதனான் நாடு இடையிட்ட மொழி பெயர் தேம் என்பதும்  விளங்குதல்
காண்க.
 

26) மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்  என்பது :   ஓதல் முதலாய
பிரிவிற் பிரிந்தவன்    மீண்டு   வருதற்கு   நேர்ந்த   வகையின்கண்ணும் என்றவாறு. வரவு வாய்ந்த என்பது வரவாய்ந்த என விகாரப்பட்டு நின்றது.
 

எ - டு :

நெடுங்கழை முளிய வேனில் நீடி 

கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் 

வெய்ய ஆயின முன்னே, இனியே 

ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் 

தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே 

(ஐங்-322)
 

எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க.
 

27) அவ்வழிப் பெருகிய  சிறப்பின் கண்ணும் என்பது : ஓதல் முதலாய
பிரிவின்கண் ஆற்றிய  அருஞ்செயல்களிடமாகப்  பெருக்கமுற்று   எய்திய
சிறப்பின்கண்ணும் என்றவாறு.
 

அவையாவன : வேற்றுநாட்டு அகல்வயிற் சென்று ஓதியும் உணர்த்தியும்
எய்திய ஞானத்தான் இசை பெறுதலும், பகை  வென்று   தணித்துச் சீர்த்தி
பெறுதலும், பணிந்தார்   மாட்டுத்      திறைபெற்றுயர்தலும்    தூதினான்
மாண்புறுதலும்,  பொருள்   முற்றி   அடைதலும்,     காவலான் போற்றப்
பெறுதலும் பிறவுமாம்.