134கற்பியல்

களும் எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய தலைமகனிடத்தனவாகும்.
 

தலைவனது ஒழுகலாறு கற்பின்கண்   மிகப்   பரந்து  பட்ட நிலையை
உடையதாகலின்  நல்லிசைப்புலவோர் மேலும் மேலும்   பலவாக விரித்துச்
செய்யுள் வழங்குதற்குரிய வகைமையான் இவை அமைந்துள்ளமை தோன்றப்
"பண்ணமை பகுதி முப்பதின் ஒரு மூன்று" என்றார். பண்ணுதல் = செய்யுள்
செய்தல். கற்பின்கண் தலைமகன் ஒன்னாரைவென்று  தன்னோரைப் புரந்து
ஈதலும் துயத்தலும் ஓம்பலுமாகப் பலர் போற்ற இல்லறம் புரிந்து வாழ்தலின்
"எண்ணருஞ் சிறப்பின்  கிழவோன்"    என்றார்.   அங்ஙனம்   விரித்துப்
பண்ணியவாக வந்தனவற்றுள் சில வருமாறு :
 

எரிகவர்ந் துண்ட என்றுழ் நீளிடைச் 

சிறிதுகண் படுப்பினும் காண்குவன் மன்ற 

நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் 

வேங்கை வென்ற சுணங்கின் 

தேம்பாய் கூந்தல் மாஅ யோளே  

(ஐங்-324)
 

இது தோழி வினாயவழித் தன் ஆராக்காதலைக் கூறியது.
 

தாழிருள் துமிய மின்னித் துண்ணென 

வீழுறை இனிய சிதறி ஊழின் 

கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் 

பெய்இனி வாழியோ பெருவான், யாமே 

செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு 

இவளின் மேவினம் ஆகிக் குவளைக் 

குறுந்தாள் நறுமலர் நாறும் 

நறுமென் கூந்தல் மெல்லணை யேமே  

(குறு-270)
 

வினை முடிந்து மீண்டு வந்த தலைவன்  தலைவியொடு உடனுறை மகிழ்ச்சி
கூறியது.
 

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 

நீடுவ தன்றுகொல் என்று (குறள் - 1307) 

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப 

நீடுக மன்னோ இரா (குறள் - 1329)
  

இவை ஊடிப்பெறும் மகிழ்ச்சி கூறின. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க.
 

சூ. 149 :

அவனறிவு ஆற்ற அறியு மாகலின்

ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்