கற்பியல்169

இனி  "வாயில்  உசாவே  தம்முளும்  உரிய"  (செய்-191)  என்பதனான்
அவர்தம்முட்  கூறிக்கொள்ளும்  கூற்றுக்களை  இதன்பாற்படுத்து அடக்கிக்
கொள்க. அவற்றுள் சில வருமாறு :
 

கானங் கோழிக் கவர்குரற் சேவல்

ஒண்பொறி எருத்திற் றண்சிதர் உறைப்பப்

புதல்நீர் வாரும் பூநாறு புறவிற்

சீறூ ரோளே மடந்தை வேறூர்

வேந்துவிடு தொழிலொடு செலினும்

சேந்துவரல் அறியாது செம்மல் தேரே

(குறு-242)
 

இது பாணன், பாடினிக்குத் தலைவன் காதன்மை சிறப்புக் கூறியது.
 

'கண்டிசின்  பாண பண்புடை  தம்ம" என்னும்  குறுந்தொகைப்  பாட்டு
(359)  தோழி  பாணற்குரைத்தது.  "மதவலியானை"  என்னும்  அகப்பாட்டு
(அக-354)  விறலி  பாணற்குரைத்தது. பிறவும்  சான்றோர் இலக்கியங்களுட்
கண்டு கொள்க.
 

சூ. 155 :

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக் குரிய வாகும் என்ப

(12)
 

க - து :

கற்பின்கண் செவிலி கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றது.
 

பொருள் : இறப்பு     நிகழ்வு     எதிர்வு    என்னும்      மூன்று
காலத்திற்கும்   ஏற்புடையவாய்   வழிவழித்  தொடர்ந்து   மேற்கொள்ளத்
தக்கனவாய நற்பொருள்களை  எடுத்துரைத்தலும்  நல்லவையல்லாதவற்றைக்
கடிந்துரைத்தலும் செவிலிக்குரியவாகும் எனக் கூறுவர் புலவர்.
   

எ - டு :

கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்

உட்குடையாள் ஊராண் இயல்பினாள்-உட்கி

இடனறிந் தூடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்

(நாலடி-384)
 

இது நல்லவை கூறி அல்லவை கடிந்தது.
 

"ஆகும்"  என்றதனானே  தலைவியின்  இல்லற  மாண்பினை  உவந்து
நற்றாய்க்குக் கூறுவனவும் கொள்க.
 

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப்