| எ - டு : | உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் |
| தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி |
| விழவொடு வருதி நீயே இஃதோ |
| ஓரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் |
| பெருநலக் குறுமகள் வந்தென |
| இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே |
(குறு-295) |
இது தலைவனைக் கழறியது. |
| மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
| எனைமாட்சித் தாயினும் இல். |
(குறள்-52) |
இது தலைவியைக் கழறியது. |
| சூ. 158 : | உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் |
| புலத்தலும் ஊடலும் கிழவோற் குரி |
(15) |
க - து : | தலைவற்கு ஊடல் நிகழும் இடமாமாறு கூறுகின்றது. |
பொருள் : தன்பால் பரத்தைமை கற்பித்துப் புலத்தலும் ஊடலும் உற்ற தலைவியைப் பணிமொழி கூறித் தேற்றும் வழித் தேறாமல் அவ்வூடலும் புலத்தலும் எல்லை மிகுமிடத்தும், தான் செய்யும் குறிப்பினைச் செவ்விதிற் கொள்ளாமல் பிழைபடக் கொள்ளுமிடத்தும் புலத்தலும் ஊடலும் தலைவற்கும் உரியவாகும். |
கிழவோற்கும் என்னும் உம்மை விகாரத்தாற் றொக்கது. |
| எ - டு : | எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் |
| பூவில் வறுந்தலை போலப் புல்லென்று |
| இனைமதி வாழியோ நெஞ்சே மனைமரத்து |
| எல்லுறு மௌவல் நாறும் |
| பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே |
(குறு-19) |
இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலந்து கூறியது. |
| நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர் |
| யாருள்ளி நோக்கினீர் என்று |
(குறள்-1320) |
இது தன் குறிப்பினைப் பிழைபட உணர்ந்தமை நோக்கித் தலைவன் புலந்து கூறியது. |
செய்குறி பிழைப்பினும் என்பதற்குக் களவின்கண் தலைவி தான் செய்த குறியைப் பிழைப்பினும் என்பார் நச்சினார்க்கினியர். |