172கற்பியல்

களவின்கண்  தலைவி  குறிபிழைத்தல், இற்செறிப்புறுதல், தாய்  துஞ்சாமை
முதலிய  முட்டுப்பாடுறுதல் ஆகியவை  காரணமாகக்  குறிபிழைத்தலன்றித்
தலைவி தானே  பிழையாளாதலானும், ஆண்டு அல்ல குறிப்பட்ட தலைவன்
வருந்திக்   கூறல்   ஊடலாகாமையானும்   அவர்  கருத்து  நூல்  நெறிக்
கேலாமையறிக.
 

சூ. 159 :

புலத்தலும் ஊடலும் ஆகிய விடத்தும்

சொலத்தகு கிளவி தோழிக் குரிய

(16)
 

க - து :

தலைவன்  ஊடிய  வழி   அதனைத்  தணித்தற்குரிய  கூற்றுத்
தலைவிக்கின்றித் தோழிக்குரியதாகும்  என அகப்பொருள்  மரபு
கூறுகின்றது.
   

அஃதாவது;  தலைவி   ஊடலுற்றவழித்   தலைவன்  பணிமொழி கூறி
இரந்துணர்த்துமாறு போலத் தலைவி தலைவனைப் பணிந்து இரந்து அவன்
ஊடலை மாற்றுதல் அகனைந்திணைக்குரிய மரபன்று. தலைவனது ஊடலைத்
தணித்தல் ஒன்றித் தோன்றும் தோழிக்கே உரியதாகும் என்பதாம். என்னை
எனின், தலைவி அவன்  ஊடலைத்  தணிக்கப் புகின் அஃது நாணழிவாய்ப்
பெருந்திணைப்பாற்படுமாகலின் என்க.
  

பொருள் : தலைவன்  புலத்தலும்   ஊடலும்   உற்றவிடத்து   அவை
நீங்குமாறு சொல்லத்தகும் கூற்றுக்கள் தோழிக்குரியவாகும்.
  

தலைவனைக்  கடிந்தும் பணிந்தும்  தோழிகூற்று  நிகழ்த்துதலே  யன்றி
இவ்விடத்தும்  தலைவியின்   பொருட்டு  நிகழ்த்தும்  என  நின்றமையின்
உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மையாம்.
 

எ - டு :

தாயுயிர் வேண்டாக் கூருகிர் அலவன்

நரிதின்று பரிக்கும் ஊர யாவதும்

அன்பு முதலுறுத்த காதல்

இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே

(நச்-மேற்)
 

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்

(குறள்-1303)
 

எனவரும்.
 

சூ. 160 :

பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழவி

மடத்தகு கிழமை யுடைமை யானும்

அன்பிலை கொடியை என்றலும் உரியள்

(17)
 

க - து : 

தலைவன்  புலந்தவிடத்துத்   தோழி  கூற்றிற்குரியதொரு
சிறப்புவிதி கூறுகின்றது.