தலைவன் தலைவிக்குக் களவியலுள்ளும் கற்பியலுள்ளும் கூறப்பட்ட கிளவிகளைப் போலாமல் இவை, நோயும் இன்பமுமாகிய நிலையிற் காமங்கண்ணிய மரபு பற்றி வருதலின் "உரியபாற்கிளவி" என்றார். |
அறம் முதலாகிய மும்முதற் பொருள்கள் உயர்திணையாகிய மக்கட்கே உரிய பொருளாகலான் அவை ஆன்ம உணர்வு இல்லாத ஏனைய அஃறிணைப் பொருட்கு இல்லை எனினும், ஈண்டு நெஞ்சிற்கும் விலங்கு முதலாயவற்றிற்கும் உயர்திணைக்குரிய இயல்புகளை ஏற்றிக் கூறுதலான் அவ்வழி அம்மூன்றும் அவற்றிற்கு உரியவாகக் கூறப்படும் என்பதும் அங்ஙனம் கூறுதலே பொருளியல் மரபு என்பதும் இதனாற் புலப்படும். |
உரையாசிரியன்மார் இச்சூத்திரத்திற்குப் பொருளியல் மரபுக்கு ஒவ்வாத விளக்கங்களைக் கூறிச் சென்றனர். |
பாற்கிளவி எனினும் பகுதிக்கிளவி எனினும் ஒக்கும். இதற்குப் பக்க சொல், ஒரு கூற்றுச்சொல் எனப் பொருள் கூறுவர். இக்கிளவிகள் வேட்கை ஒருதலை யுள்ளுதல் (கள-9) என்னும் சூத்திரத்துக் கூறிய "மறத்தல் மயக்கம் சாக்காடு" என்னும் உணர்வுகள் பற்றித் தோன்றுதலின் "அறிவும் புலனும் வேறுபட நிறீஇ" என்றார். இந்நிலை, காமங் கண்ணிய கிழவன் கிழத்தியர்க்கே அமையும் என்பது விளங்க "இருவர்க்கும்" என்றார். |
இனித் தலைவன் தலைவியர் அறிவும் புலனும் வேறுபட்ட நிலையில் கூறும் இத்தகு 'பாற்கிளவிகள்' அவர் மாட்டு ஆரா அன்பு பூண்டொழுகும் தோழி மாட்டும் செவிலி மாட்டும் தலைவியது துன்ப நிலையை எண்ணிக் கலங்கி அவர்தம் அறிவும் புலனும் வேறுபடுமிடத்தும் நிகழுமெனப் பின்னர்க் கூறுவார் ஆசிரியர். அவ்வழி ஈண்டுத் தலைவன் தலைவியர்க்கு ஓதிய நெஞ்சொடு புணர்த்தல், தொழிற்படுத்தல், உறுபிணிதம்போற் சேர்த்தல் ஆகியவற்றுள் ஏற்பன பொருந்திவரும் எனவும் அறிக. |
எ-டு : | உண்ணாமையின் ............ என்னும் அகப்பாட்டினுள் |
(123) |
| "இறவொடு வந்து ............ பொருட்கே" |
என நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி, ஓதத்தையும் நெஞ்சினையும் உயர்திணையாக்கி உவமவாயிற் படுத்தவாறு கண்டு கொள்க. |