பொருளியல்201

என்பது  பெருந்திணைக்கண்  அஃறிணையை உயர்திணையாக உவமவாயிற்
படுத்து அவலம் பற்றிக் கூறியது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
 

தலைவன் தலைவியர் தாம்  மேவிய காம ஒழுக்கத்தின்கண்  துன்பமும்
இன்பமும் மிக்கவிடத்துச் சிந்தித்துணரும் மன அறிவும் ஐம்புலனாற் பெறும்
பொருளறிவும் தம் உணர்வொடு ஒன்றி நில்லாமல் அறிவு தாழ்வுற உணர்வு
மேலுறுதலான்  நெஞ்சத்தொடும்  அஃறிணைப்  பொருள்களொடும்  கூற்று
நிகழ்த்துவர்  என்பதும், அஃறிணைப்  பொருள்கள்  பேசுதற்கு  உரியவை
போலவும்  மக்களைப் போலச்  செயலாற்றுதற்குரியவை  போலவும் அவை
அறம் பொருள்  இன்பமாகிய மும்முதற்  பொருளையும்  கருதி  ஒழுகுதல்
போலவும்  கொண்டு   கூற்று  நிகழ்த்துவர்   என்பதும்  இச்சூத்திரத்தின்
விளக்கமாகும். இஃது பகுத்தறிவிற்கு ஒவ்வுமோ? எனின் இலக்கியக்கலைக்கு
உயிராகச் சிறந்து  வருதலின் அறிவியலுக்கு  ஏற்புடையதாதலை அறியலாம்.
அறிவினது  முடிவின்கண்  தோன்றுவதே  உணர்வென்பதையும் உணர்வின்
வெளிப்பாடே  இன்பமும் துன்பமுமாகிய நிகழ்ச்சிகள்  என்பதையும் ஓர்ந்து
கொள்க.
 

சூ. 199 :

கனவும் உரித்தால் அவ்விடத் தான
(3)
 

க - து :

அந்நிலைமைக்கண் கனாக்கண்டுரைத்தலும் உரித்தென்கின்றது.
 

பொருள் :  காமங்  கண்ணியதாக  வரும்   நோயும்   இன்பமுமாகிய
நிலைமைக்கண்   கனவு    கண்டுரைத்தலும்   தலைவன்   தலைவியர்க்கு
உரித்தாகும்.
 

உவமவாயிற்  படுத்துக் கூறுதலேயன்றிக்  கனவும் உரித்து என்றமையின்
உம்மை எச்சவும்மை.
 

எ - டு :

அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென்

நலந்தா ராயோவெனத் தொடுப்பேன் போலவும்

கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப்

புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும்

..... ...... ....... கனவினாற் கண்டேன் தோழி!

(கலி-128)
 

இது தலைவி கனவு கண்டுரைத்தது.
 

'ஒழித்தது பழித்த' என்னும் அகப்பாட்டினுள்
(39)
 

தலைவன்
 

"இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு

நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு

இன்னகை! இனைய மாகவும் எம்வயின்