பொருளியல்203

'நட்பின்  நடக்கை'   என்றது   கிழவனும்   கிழத்தியும்    பிரிவின்றி
உடனுறையும்  ஒழுக்கத்தை. காமக்கூட்டம் இடையறவு படுதலான் தலைவன்
தலைவியரும்,  பிரிவாற்றாமையான்  செவிலியும் நற்றாயும் கலக்கமுறுதலின்
இந்நால்வர்க்கும் உரித்தாயிற்று.
 

தலைவன் தலைவியரைக் கழறியுரைத்தலும், தலைவியை ஆற்றுவித்தலும்,
முன்னின்று  உடன்போக்கலும்,  வாயில்  மறுத்தலும்,  வாயில்   நேர்தலும்
தோழிக்குரிய  இயல்பாதலின்  அறிவும் புலனும் வேறுபட  நிறுத்துக் கூறும்
பால்கெழு  கிளவி தோழிக்கு  இல்லையாயிற்று. அவ்வாற்றான்  பாங்கற்கும்
பால்கெழு கிளவி இயையாமை அறிக.
 

இங்ஙனம்  அகப்பொருள்  மாந்தர்தம் பண்பும்  இயல்பும்  உளவியலும்
நோக்கி ஆசிரியர் கூறும் இலக்கண  மரபுகளை  ஓராமல்  முன்னுக்குப்பின்
முரணாக    உரையாசிரியன்மார்  கூறும்   விளக்கங்கள்  தமிழ்நெறியொடு
பொருந்திவாராமையைத் தேர்ந்து தெளிக.
 

சூ. 202 :

உயிரும் நாணும் மடனும் என்றிவை

செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய 

(6)
 

க - து :
 

மேற்கூறிய  நால்வரும்   அங்ஙனம்   பால்கெழு  கிளவியாகக்
கூற்று   நிகழ்த்தற்கு  ஏதுக்கூறுகின்றது.  அஃதாவது  'நோயும்
இன்பமும்'   என்னும்    சூத்திரத்து  நெஞ்சொடு  புணர்த்தும்
அஃறிணைப்    பொருளொடு   அடக்கியும்   உரைக்குமிடத்து
அறிவும்  புலனும்  வேறுபட்டவழிச்  சூழ்ந்து நிற்கும் குணங்கள்
இவையாகலின்  அங்ஙனம்   பால்கெழு  கிளவி   கிளத்தற்குக்
காரணம் இக்குணங்களே என்கின்றது.
 

பொருள் :நோயும் இன்பமுமாகிய  நிலைமைகட்குரிய காமமிகுதிக்கண்
புலனுணர்வும், துணிதற்  காற்றாத  நாணமும், அறிவு  செயற்படாத மடமும்
குற்றந்தீர்ந்த  சிறப்பினையுடைய  தலைவன்,  தலைவி,   செவிலி,  நற்றாய்
என்னும் நால்வர்க்கும் உரியவாகும்.
 

'உயிர்'  என்றது  ஐம்புலக்கிளர்ச்சியான்  எய்தும் உணர்வினை.  அஃது
உயிரைப்பற்றி நிற்றலின் 'உயிர்' என்றார். அது பிறந்தவழிக் கூறல் என்னும்
ஆகுபெயர்.  இதற்கு  இதுவே  பொருளாதலை   மேல்வரும்,   "உடம்பும்
உயிரும் வாடியக் காலும்" (சூ-8) என்பதனான் அறிக.
 

ஈண்டு 'நாண்' என்றது  பெண்மைக்குரிய குணமாகக் களவியலுள் கூறிய
நாண் அன்று. இஃது வினை பற்றி