214பொருளியல்

கழியக் காதலர் ஆயினும் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்.
 

என்றது நன்மையும் தீமையும் பிறிதின் மேல் வைத்துக் கூறியது.
 

ததும்புசீர் இன்னியம் கறங்கக் கைதொழுது

உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக்

கடம்பும் களிறும் பாடித் தொடங்குபு

தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும்

ஆடினர் ஆதல் நன்றோ

(அக-138)
 

என்பது   வெறியாட்டுணர்த்தியது.  பிறவும்   சான்றோர்   செய்யுள்களுட்
கண்டு கொள்க.
  

சூ. 212 :

வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்தென மொழிப

(16)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :  பொழுதும்  ஆறும்  வழுவிய  குற்றங்காட்டல் முதலாகிய
ஏதுக்களான் வரைதல்  வேட்கையைக்  குறிப்பாற்   புலப்படுத்தலேயன்றிக்
களவு நீட்டித்தலைக்   கருதாது ஒழுகும்  தலைவனது வேட்கையை மறுத்து
வெளிப்படையாகக்  கிளந்து   உள்ளவாறு     கூறுதலும்   வழக்கின்கண்
பொருந்திய பக்கத்தான் தோழிக்குரியது எனக் கூறுவர் புலவர்.
 

எ - டு :

கொடிச்சி இன்குரல் கிளிசெத்து அடுக்கத்துப்

பைங்குரல் ஏனற் படர்தரும் கிளியெனக்

காவலும் கடியுநர் போல்வர்

மால்வரை நாட வரைந்தனை கொண்மே

(ஐங்-289)
 

இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் வலிந்துரை கைக்கிளை, பெருந்திணை
கட்குக்  கூறிய இலக்கணச்  சூத்திரங்களானே  பெறப்படும். பொருளியலுட்
கூறத்தக்க குறிப்பியைபு  யாதுமின்மையின் அவர்  கருத்துப் பொருந்தாமை
தெளிவாம்.
 

சூ. 213 :

தேரும் யானையும் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப

(17)
 

க - து : 

தலைவர்க்குரியதோர் மரபு கூறுகின்றது.
 

பொருள் :களவின்கண் குறியிடத்துக்குச்  செல்லும்  தலைவர்  தத்தம்
நிலைமைக்கேற்பத்     தேரையும்   யானையையும்  குதிரையையும்   பிற
ஊர்திகளையும் ஊர்ந்து சேறலும் உரியர் எனக் கூறுவர் புலவர்.