பொருளியல்215

தத்தம் தகுதிகட்கு ஏற்பச்  செல்லாமையும்  பிறர்  ஐயத்திற்கு ஏதுவாம்
ஆதலின் 'இயங்கலும் உரியர்' என்றார். உம்மையான் ஊர்தியின்றிச் சேறலே
பெருபான்மை     எனக்   கொள்க.   பிறவாவன   வையமும்,   அத்திரி
முதலாயினவுமாம்.
 

எ - டு :

கடிகொண் டனளே தோழி பெருந்துறை

எல்லையும் இரவும் என்னாது கல்லென

வலவன் ஆய்ந்த வண்பரி

நிலவுமணல் கொட்குமோர் தேருண்டு எனவே

(அக-20)
 

கடுமான் பரிய கதழ்பரி கடைஇ

நடுநாள் வரூஉம்

(நற்-149)
 

இவை தேரும் பரியும் ஊர்ந்து வந்தமை கூறின.
 

கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி

நெடுநீ ரிருங்கரிப் பரிமெலிந் தசைஇ

(அக-120)
 

என்பது  அத்திரியூர்ந்து  வந்தமை  கூறிற்று. பிறவும்  வந்தவழிக்   கண்டு
கொள்க.
 

இதன்கண் பொருளியற்குச் சிறந்த குறிப்பமைதி இல்லையாயினும் தோழி
எளித்தல், ஏத்தல் முதலிய  வகையான் அறத்தொடு  நிற்றற்கண் கூறப்படும்
தலைவனது சிறப்புப் புலப்படுமாதலின் இதனை ஈண்டு வைத்தார் என்க.
 

சூ. 214 :

உண்டற் குரிய வல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே

(18)
 

க - து :  அகத்திணை   மாந்தர்   கூற்றினுள் இசை திரிந்திசைக்கும்
ஒருசார் சொற்பொருண்மை கூறுகின்றது.
 

பொருள்: உண்டல் - தின்றல் முதலிய தொழில்களை நிகழ்த்துதற்குரிய
வல்லாத  பொருள்கள் உண்டல்  முதலாய  தொழில்களைப் புரிவனபோலக்
கூறலும் அகவொழுகலாற்றின்கண் மரபாகும்.
 

எ - டு : 

பசலையால் உணப்பட்டுப் பண்டை நீரொழிந்தக்கால்

(கலி-15)
 

எனவரும்.
 

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காண லுற்று

(குறள்-1244)
 

என்பதுமது.