218பொருளியல்

சூ. 217 :

சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே
(21)
 

க - து : 

தலைவன்    பொருள்வயிற்    பிரிதலைக்    கருதியவிடத்துத்
தலைவிக்குரியதொரு கூற்று அமையுமாறு கூறுகின்றது.
 

பொருள்:  தலைவனது  பிரிவுக்  குறிப்புணர்ந்தவழித் தலைவி தானும்
அவனொடு சுரத்தின்கண் செல்லுதும் எனக் கூறலும் புலனெறி வழக்கின்கண்
நீக்கும் நிலைமைத்தில்லை.
 

இஃது இருவகைக் கைகோளிற்கும் பொதுவாகிய குறிப்பாகும்.
 

எ - டு :

மரையா மரல்கவர மாரி வறப்ப

வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்

உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்

தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமையகாடு என்றால்

என்நீர் அறியாதீர் போல இவைகூறல்

நின்நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பந் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு

(கலி-6)
 

இது  கற்பின்கண்  தலைவி  கூறியது. களவின்கண்  கூறியதற்குச் செய்யுள்
வந்தவழிக் கண்டுகொள்க.
 

உரையாசிரியன்மார்  இதற்குத்  தோழி  சுரத்தருமை கூறித் தலைவனை
அழுங்கச் செய்தல்  என்றும்,  தலைவன்  சுரத்தருமை  கூறித் தலைவியை
விலக்குதல்    என்றும்     பொருள்   கூறுவர்.     தலைவன்    கூற்று
அதிகாரப்படாமையானும்  அங்ஙனம் தோழி கூறின் அஃது அச்சுறுத்தலாக
அமையுமாகலானும் அவர் கருத்து ஆய்விற்குரியதாகும் என்க.
 

சூ. 218 :

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே

(22)
 

க - து :

களவியல்  கற்பியல்களுள்   ஓதப்பெற்ற    இலக்கணங்களொடு
உயர்ந்தோரான்   வழங்கப்பெறும்  உலகியல்  வழக்கும் களவும்
கற்பும்   பற்றி வரும் செய்யுட்குரியவாகும் என்கின்றது. இம்மரபு
பொருளியல்   பற்றியதாகலின்    இதனைச்     செய்யுளியலுள்
வையாமல் ஈண்டு வைத்தார் என்க.
 

பொருள் :அகப்பொருள் மாந்தர்தம் கூற்றிற்குரியவாக உயர்ந்தோரான்
கிளக்கப்படும் கிளவிகள் உலகியல் வழக்காகப்