பொருளியல்247
        

எவ்வங் கூறிய வைகலும் வருவோய்

கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்

எண்மை செய்தனை ஆகுவை, நண்ணிக்

கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து

இட்டாறு இரங்கும் விட்டொளிர் அருவி

அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்

கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்

பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்

நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து

மகளிர் மாங்காட் டற்றே துகளறக்

கொந்தோடு உதிர்ந்த கதுப்பின்

அந்தீங் கிளவித் தந்தை காப்பே

(அக-288)
 

எனவரும். இது பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇத்  தலைவற்கு வரைவு
கூறியது. இதன்கண் தன் எவ்வங் கூறுதற்காக வரும் தலைவன் என்றதனான்
தோழி  அவன்  மனநிலையை  நன்குணர்ந்திருந்தும்,  அவனது இளி வந்த
நிலையை எண்ணாமல்
 

"நின்மலை ஆரம்  நீவிய  அம்பகட்டு  மார்பினை,  சாரல்  வேங்கைப்
படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும்  உருவக்  கண்ணியை" எனச்
சிறப்பித்தலும், புனத்தை எரியூட்டிப் பண்படுத்தி ஏனல்  விளைவு  செய்யும்
இயல்பானதொரு  செயலை, "எரிதின்  கொல்லை இறைஞ்சிய ஏனல்" எனச்
சிறப்பித்தலும்   வலிந்து   கூறப்பட்டனவாதல்   தெரியலாம்.   அதனான்,
அவற்றான் தலைவற்குச் சில உணர்த்துதல் தோழி கருத்தாதலை அறியலாம்.
அக்கருத்துக்களாவன :-
 

"நின்மலை ஆரம் நீவிய அம்பகட்கு மார்பினை"  என்றது : தலைவியை
வரைந்தெய்தி அவள்  நலத்தினைத் துய்த்தல்  நின்  தலைமைக்குத் தக்கது
என்பதும், "சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும்
உருவக்  கண்ணியை"  என்றது :  நொதுமலர்  வரைவு  வேண்டி  வருதல்
கூடுமாதலின் நீ அவரின் முற்பட்டு நின்தமரை  வரைவுவேண்டி  உய்த்தல்
தகவதாகும் என்பதும். "எரிதின் கொல்லை  இறைஞ்சிய  ஏனல்"  என்றது :
தந்தையின்  காவல்   காரணமாக  ஊர்  அலர்  எழாது  தேய்ந்தமையான்
இற்செறிப்புற்றுள்ள   தலைவி   நின்  வரைவினை  எதிர்நோக்கி  ஒடுங்கி
இருக்கின்றாள் என்பதும் தோழி  உணர்த்தக்  கருதிய  உள்ளுறைகளாகும்.
இவ்வுள்ளுறை   செய்யுட்களுள்    அருகியே    வரும்.   இச்செய்யுளுள்
"கொடியோர் குறுகும் ... .... அடுக்கத்து" என்பது உள்ளுறை உவமமாகும்.