மெய்ப்பாட்டியல்
எ - டு :

மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்

தாமிரந் துண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் வுலகத் தானே

(புறம்-74)
 

என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம்.
 

ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்

அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச்

சொல்லஞ் சொற்கேட்டி ...?

(கலி-47)
 

என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல்.
 

4. மென்மையாவது :   ஆற்றலும்      திறனும்     அமையாமையும்
வலியின்மையுமாம்.  மென்மை   எனினும்   நொய்மை  எனினும்  ஒக்கும்.
நல்குரவெண்பார்   இளம்பூரணர்,   அஃது   அழுகைக்குப்   பொருளாகக்
கூறினமையான் சாலாதென்க.
 

எ - டு :

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்

பெண்மை யுடைக்கும் படை

(குறள்-1258)
 

என்பது தன் மாட்டமைந்த மென்மைபற்றி வந்த இளிவரல்.
 

கடந்தடு தானை மூவிரும் கூடி

உடன்ற னிராயினும் பறம்புகொளற் கரிதே

(புறம்-110)
 

என்பது பிறர் மென்மை பற்றி வந்த இளிவரலாம்.
 

"யாப்புற" என்றதனான் "யானை,  ஒருகை  உடையது  எறிவலோயானும்
இருகை சுமந்து வாழ்வேன்" எனப் பகைக்கு மென்மை  கற்பித்துக்  கூறலும்
இளிவரலாய் அடங்குமென்க.
 

சூ. 256 :

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே

(7)
 

க - து :

புதுமை முதலிய நான்கும் பற்றி மருட்கை பிறக்குமென்கின்றது.
 

பொருள் :அறிவு,     நிறையாவழித்தாகும்    மருட்கை    என்னும்
மெய்ப்பாட்டிற்குக்   காரணமாகிய   பொருள்,   புதுமையும்  பெருமையும்
சிறுமையும் ஆக்கமுமாகிய நான்கும் எனக் கூறுவர் புலவர். ஒடு  எண்ணுப்
பொருட்டாய் வந்தது. ஏகாரம் ஈற்றசை.
 

'மதிமை சாலா' என்றது யாதொரு பொருள்  மருட்கை  செய்கின்றதோ
அப்பொருள்   பற்றிய   அறிவு   நிரம்பாமையாம்.   மருட்கை  எனினும்
வியப்பெனினும்  இறும்பூதெனினும் ஒக்கும். அற்புதம்  என்பது  வடசொல்.
இவையும் மேலன போல இருபாலும் பற்றி வரும்.