276மெய்ப்பாட்டியல்

1. புதுமையாவது :அதுகாறும்  காணாததைக்  காண்டலும்  நிகழாதது
நிகழ்தலுமாம்.
 

எ - டு :

நீங்கிற் றெறூஉம் குறுகுங்காற் றண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றா ளிவள்

(குறள்-1104)
 

என்றது தன்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

................... பெருந்தேர் யானும்

ஏறிய தல்லது வந்த வாறு

நனியறிந் தன்றோ விலனே

.................. இல்வயின் நிறீஇ

இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே

(அகம்-384)
 

என்பது பிறர்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

2. பெருமையாவது :அளவையின் இகத்து கழியப் பெரிதாயினது எனக்
கருதிக் கோடலாம். (பெருமை - பெருக்கம்)
 

எ - டு :

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு

(குறள்-1127)
 

கையான் முகக்குமளவிற்குப்  பெருகிற்றென்றலின் இது தன்கண் நிகழ்ந்த
பெருமைபற்றிப் பிறந்த மருட்கையாம்.
 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று

(குறள்-1146)
 

ஒரு    நாளைக்   காட்சியளவிற்றாக    நில்லாது    அலர்   ஊரெங்கும்
பரவிற்றென்றலின் இது பிறர்கட்டோன்றிய பெருமைபற்றி வந்த மருட்கை.
 

3. சிறுமையாவது : அளவையின்  இகந்து   தவச்சிறிதாயினது  எனக்
கருதிக்கோடல். (சிறுமை - சிறுத்தல்.)
 

எ - டு :

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்

(குறள்-1233)
 

இது தன்கண் நிகழ்ந்த சிறுமைபற்றிப் பிறந்த மருட்கை.
 

மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன்

கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம

கடையிற் சிவந்த கருநெடுங்கட் பேதை

இடையிற் சிறியதொன் றில்

(பேரா - மேற்கோள்)
 

இது பிறர் கட்டோன்றிய சிறுமைபற்றி வந்த மருட்கை.