மெய்ப்பாட்டியல்

4. ஆக்கமாவது : ஒன்றினின்று ஆதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று
பிறிதொன்றாகத் திரிதலுமாம்.
 

எ - டு :

புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்த லுறுவது கண்டு

(குறள்-1259)
 

புலவி கலவியாகத் திரிந்த தென்றலின் இது  தன்கட்டோன்றிய ஆக்கம்
பற்றிப் பிறந்த மருட்கையாம்.
 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்

(குறள்-1120)
 

தனக்கு   மென்மையாயவை    தலைவிக்கு   வன்மையாயின   என்றலின்
பிறர்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவந்த மருட்கை.
இனிப் பேராசிரியர்,
 

"எருமை யன்ன கருங்கல் லிடைதோ

றானிற் பரக்கும் யானைய முன்பிற்

கானக நாடனை நீயோ பெரும

(புறம்-5)
 

என்றது.
 

நரிவெரூஉத்தலையார் சாபம்  நீங்கி  நல்லுடம்பு  பெற்றமையான்  தன்கண்
தோன்றிய  ஆக்கம்பற்றி  வியப்புப்  பிறந்ததென்பார்.  நல்லுடம்பு  பெற்ற
நிகழ்ச்சி  அச்செய்யுட்கண்  அமையாமையான்  அது  பொருந்துமாறில்லை
என்க.
 

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாங்கு

(நாலடி - 38)
 

என்பதனைப்      பிறபொருளாக்கம்பற்றிப்       பிறந்த     வியப்பிற்கு
எடுத்துக்காட்டுவார்    அவர்.      அஃது      இயற்கை     யாதலன்றி
ஆக்கமாகாமையறிக.
 

இனி   "மதிமை     சாலா    மருட்கை"   என்றமையான்   சிறியோர்
பெருஞ்செயல்புரிதலும் பெரியோர் சிறுசெயல்புரிதலும் வியப்பின் பாற்படுத்து
அடக்கிக் கொள்க.
 

எ - டு :

"கிண்கிணி களைந்த கால்" என்னும் புறப்பாட்டு

(புறம்-77) சிறியோன் பெருஞ்செயல் செய்ததாம்.

அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச்

சொல்லுஞ் சொற்கேட்டி சுடரிழாய்

(கலி-47)
 

என்பது    பெரியோன்    சிறுசெயல்   புரிந்ததாம்,   பிறவும்   இவ்வாறு
வருவனவற்றை ஓர்ந்து கொள்க.
 

சூ. 257 :

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே

(8)
 

க - து :

அணங்கு   முதலாய   நான்கும்   பற்றி    அச்சம்   பிறக்கும்
என்கின்றது.