மெய்ப்பாட்டியல்
எ - டு :

அற்றம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம்

கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்

துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின்

புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை

(கலி-4)
 

என்பதனாற் கள்வர் அச்சத்திற்குரியராமாறு கண்டு கொள்க.
 

4. தம்மிறை :என்பது   இரட்டுற     மொழிதலாய்   (தம்    இறை)
அரசனையும்,    வழிபடு     தெய்வத்தையும்    (தம்மிறை)   தாம்புரிந்த
தீவினைக்குற்றத்தையும் குறித்து நின்றது.  எனவே  இவ்இருவகை  பற்றியும்
அச்சம் பிறக்குமென்பதாயிற்று.
 

எ - டு :

எருத்துமேல் நோக்குறின் வாழலே மென்னும்

கருத்திற்கை கூப்பிப் பழகி - எருத்திறைஞ்சிக்

கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை

மேல்வண்ணங் கண்டறியா வேந்து

(பேரா-மேற்கோள்)
 

என்பது அரசன் பொருளாக அச்சம் பிறந்தது.
 

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉ மென்ப, யாவதும்

கொடியோ ரல்லரெம் குன்று கெழுநாடர்

(குறு-87)
 

என்பது தலைவி தலைவன் பொருட்டுத் தெய்வத்தை அஞ்சியதாம்.
 

பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவாம்  இல்லிறப்பான்  கண்
(குறள்-142)    அச்சமே     கீழ்கள    தாசாரம்    (குறள்-1075)    என
வருவனவற்றான்தமது குற்றம் அச்சத்திற்கு ஏதுவாதலைக்  கண்டு  கொள்க.
இது தன்கண்ணும் பிறர்கண்ணும் என்னும் இருபாலும்  பற்றிவரும்.  ஏனைய
பிற பொருட்டாயே வருமெனக் கொள்க. "பிணங்கல் சாலா" என்றதனான்.
 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது 

அஞ்சல் அறிவார் தொழில் 

(குறள்-427)
 

என்றதனான்   பழியொடுவருவன   பற்றி   அஞ்சும்   அச்சமும்   இதன்
பாற்படுத்துக் கொள்க.
 

சூ. 258 :

கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே

(9)
 

க - து :

கல்வி முதலிய நான்கும் பற்றிப் பெருமிதம்வரும் என்கின்றது.