மெய்ப்பாட்டியல்

4. கொடையாவது :வரையாது    வழங்கும்     வண்மை.    அஃது ஈகைபோலாது   செல்வமேயன்றி    உயிரும்    உடம்புமாகிய   பொருள்
யாவற்றையும் வழங்குதலாம்.
 

எ - டு :

முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு

முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்

(புறம்-110)
 

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்

நாடிழந் தனினும் நனியின் னாதென

வாள்தந்தனனே தலையெ மக்கீய

(புற-165)
 

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்கக் குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன்"

(புறம்- )
 

எனவரும்.
 

"சொல்லப்பட்ட"  என்றதனான்  பல்லிருங்க  கூந்தல்  மகளிர்  ஒல்லா
முயக்கிடைக்  குழைக  என்தாரே  (புறம்-73)  எனக்  காமஒழுக்கம்  பற்றி
வரும் வீறும் பெருமிதமாக அடங்குமெனக் கொள்க. இவை  நான்கும்  தன்
கட்டோன்றிய பொருள் பற்றிப் பிறக்குமென்க.
 

சூ. 259 :

உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே

(10)
 

க - து :
 

உறுப்பறை   முதலிய   நான்கும்  பற்றி   வெகுளி  தோன்று
மென்கிறது.
 

பொருள் :வெறுப்பினான் வந்த வெகுளியென்னும்  மெய்ப்பாட்டிற்குக்
காரணமாகிய பொருள் உறுப்பறை  குடிகோள்  அலை  கொலை  என்னும்
நான்குமெனக் கூறுவர் புலவர்; இவை நான்கும் பிறர்  கட்டோன்றுவனவாய்
நிகழும்.
 

1. உறுப்பறையாவது :உறுப்புக்களைச் சிதைத்தலும் ஊறுபடுத்தலுமாம்.
உறுப்பாவது  கை, கால்,  கண், செவி  முதலிய  உடலுறுப்புக்களும்,  தூது,
ஒற்று, அமைச்சு முதலிய அரச உறுப்புக்களுமாம்.
 

எ - டு :

முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று

.... ..... ...... ....... ....... ....... ................. ....... ......... ........ 

நிறஞ்சாடி முரண்தீர்த்த நீள்மருப் பெழில்யானை
(கலி-52)
 

எனவரும்.
 

2. குடிகோளாவது :  தன்குடிமைக்கும்     தன்னாற்    புரக்கப்படும்
குடிமக்களுக்கும் தீங்கிழைத்தல். கொளுவுதல் கோள் என நின்றது.