282மெய்ப்பாட்டியல்
எ - டு :

நெருநெல் எல்லைநீ எறிந்தோன் தம்பி

அகற்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்

(புற-300)
 

நின்மகன், படையழிந்து மாறினனென்று பிறர்கூற

மண்டமர்க் குடைந்த னனாயின் உண்டவென்

முலையறுத் திடுவென் யான்எனச்சினைஇ

(புறம்-278)
 

எனவரும்.
 

3. அலையாவது :கோல்    முதலாயின     கொண்டு    ஒறுத்தலும்
அலைக்கணுறச் செய்தலுமாம்.
 

எ - டு :

வரிவயம் பொருத சினக்களிறு போல

இன்னு மாறாது சினனே

(புறம்-190)
 

அம்பண அளவை உறைகுவித் தாங்கு

கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்

செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்

அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே

(பதிற்-71)
 

4. கொலையாவது :அறிவாற்றல்      புகழ்      முதலாயினவற்றைக்
கொன்றுரைப்பது. 'கொன்றன்ன இன்னா' என்பார் வள்ளுவர்.
 

எ - டு :

ஆற்ற லுடையோர் ஆற்றல் போற்றாதென்

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்

துஞ்சுபுலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே

(புறம்.-73)
 

எனவரும்
 

"வெறுப்பின் வந்த" என்றதனான் தலைவன் பரத்தைமை பற்றித் தலைவி
கொள்ளும் சினம்  முதலியவற்றை  இதனுள்  அடக்கிக்  கொள்க  என்பார்
பேராசிரியர்.   அகப்பொருள்  பற்றி  வருவனவற்றை  ஆசிரியர்  விதந்து
கூறுதலை ஈண்டு  இலேசினான் அடக்க வேண்டாமை  அறிக.  ஊடல்பற்றி
வரும் சினம் ஆண்டு "இல்லது காய்தல்" என்பதனுள் அடங்குமென்க.
 

சூ. 260 :

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று

அல்லல் நீத்த உவகை நான்கே

(11)
 

க - து :

செல்வம்   முதலிய    நான்கும்   பற்றி    உவகை   பிறக்கும்
என்கின்றது.
 

பொருள் :உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள்,
அல்லல்  தவிர்ந்த  செல்வம்,  புலன்,  புணர்ச்சி,  விளையாட்டு  என்னும்
நான்குமாமெனக் கூறுவர் புலவர். அல்லல்  நீத்த  என்பதனைச்  செல்வம்
முதலிய நான்கினோடும் கூட்டுக.