மெய்ப்பாட்டியல்

செல்வம் முதலிய நான்கும் அறத்தொடு கூடி  வாராவிடத்துத் தனக்கும்
பிறர்க்கும்  அவை  வருத்தமும்  செய்வனவாதலின் "அல்லல்  நீத்த" எனச்
சிறப்பித்துக் கூறினார் என்க.
 

1. செல்வமாவது :பொருட்  செல்வமேயன்றி    அறுசுவை   உண்டி
முதலிய  நுகர்பொருளும்,   ஆடையணி  முதலாய  துய்த்தற்  பொருளும்,
கொடியும் படையும் முதலிய அரசச் செல்வமுமாம்.
 

எ - டு :

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

(புறம்-163)
 

எனவும் ....... ...... .......... ........ .......... ......... ........ இரவல
 

வென்வே லண்ணற் காணா வூங்கே

நின்னினும் புல்லியேம் மன்னே, இனியே

இனன் மாயினேம் .... .... ..... .....

(புறம்-141)
 

எனவும் வரும். இது தன்கண்ணதாய் நிகழவரும்.
 

2. புலனாவது :ஊழான்    அமைந்த     தன்னுணர்வான்   எய்தும்
உண்மையறிவாகிய புலமைப் பேறு.
 

எ - டு :

வழிபடு வோரை வல்லறி தீயே

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி

வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே

(புறம்-10)
 

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்து

உம்பர் உறைவார் பதி

(நாலடி-137)
 

எனவரும். இஃது இருபாலும் பற்றிவரும்.
 

3. புணர்வாவது :ஒன்றியுயர்ந்த     பாலதாணையாற்    பொருந்திய
தலைவனும்   தலைவியும்   எய்தும்   உள்ளப்   புணர்ச்சியும்,  மெய்யுறு
புணர்ச்சியுமாம்.  "அல்லல்   நீத்த"  என்றதனான்  உயிரோரன்ன  நட்பிற்
புணர்ச்சியுமாம் எனக் கொள்க.
 

எ - டு :

தம்மில் லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

(குறள்-1107)
 

எனவரும்.
 

"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்"

என்னும் குறுந்தொகைச் செய்யுளும் அது.