மெய்ப்பாட்டியல்

இவை    முப்பத்திரண்டும்    எள்ளல்    முதலியவற்றைப்    போல
வரையறைப்பட்டு   அடங்காமல்   எண்வகை   மெய்ப்பாட்டினுள்  விரவி
வருதலானும்    புறத்திணைக்குச்   சிறந்துரிமை    பெற்று    நிற்றலானும்
வேறாகத் தொகுத்து ஓதப்பெற்றன.
 

மற்று   ஈண்டுக்   கூறப்பெற்றுள்ள   வியர்த்தல்,   தன்மை,  விரைவு,
வாழ்த்தல்,  நாணுதல்,   உயிர்ப்பு,  கையாறு, முனிதல்,  ஆராய்ச்சி,  ஐயம்
முதலியவாக  வருவனவற்றொடு   பின்னர்  அகத்திணைக்குரியவாக  ஓதப்
பெற்றவனவற்றுள்   வரும்,   பொறிநுதல்   வியர்த்தல்  இல்வலியுறுத்தல்,
பாராட்டெடுத்தல்,  அலர்  நாணல்,  புலம்பித்தோன்றல்,  கையறவுரைத்தல்,
இன்பத்தை  வெறுத்தல்,   ஏதமாய்தல்,   ஐயஞ்   செய்தல்   முதலியவை
ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங்கூறியது என்னை யெனின்?
அவ்வாறு   வருவன  ஒருபுடை  ஒக்குமேனும்  அகத்திணைச்  செய்யுட்கு
மெய்ப்பாட்டுறுப்புக்     கூறுங்கால்    உடைமை,    இன்புறல்   முதலிய
பொருள்பற்றிக்   கூறாமல்   புகுமுகம்புரிதல்  முதலாய   சிறப்புப்பொருள்
பற்றியும்    எள்ளல்   முதலாய    பொதுப்பொருள்   பற்றியும்    கூறல்
வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால்
புகுமுகம் புரிதல் முதலாய அகத்திணைக்கே உரியபொருள்  பற்றிக்கூறாமல்
உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும்  எள்ளல் இளமை
முதலாய   பொதுப்பொருள்   பற்றியும்   கூறல்   வேண்டும்   என்பதும்
அறிவித்தற்கென்க.
 

அது பெறுமாறியாங்ஙனமெனின்? ஈண்டு வியர்த்தல்,  நாணல்  எனவும்
ஆண்டுப் பொறிநுதல் வியர்த்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல் எனவும்
வேறுபடுத்துக் கூறுதலான் பெறுது மென்க.
 

இனி, இளம்பூரணரும் பேராசிரியரும் இக்கூறிய  முப்பத்திரண்டினையும்
நகை  முதலாய  எண்வகை மெய்ப்பாடுகட்குரிய  பொருளெனக்  கருதாமல்
இவற்றையே மெய்ப்பாடு என்று கருதி உரை விளக்கம் செய்து  போந்தனர்.
நாவலர்  சோமசுந்தர  பாரதியார்  இவை   முப்பத்திரண்டும்  மெய்ப்பாடு
போன்று செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகள் என்றும் களவிற்குரிய
இயற்கைப்புணர்ச்சி முதலிய நான்கற்கும் முறையே  எட்டெட்டாக  உரிமை
பெற்றுவரும் என்றும் வலிந்தும் நலிந்தும் பொருள்கூறிச்  சென்றனர். அவர்
கருத்து   நூல்நெறிக்கு   ஒவ்வாமையை   விளக்கப்புகின்   விரியுமாகலின்
பின்வரும் உரைக்குறிப்புகளை நோக்கி உணர்ந்துகொள்க.