மெய்ப்பாட்டியல்
எ - டு :

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி

(குறள்-118)
 

எனவரும்.
 

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே

(புறம்-192)
 

என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம்  என்னும் சுவையாகக்
கருதி  விளக்குவர்  உரையாசிரியன்மார். சாந்தம்  வேறு ; நடுவுநிலைவேறு
என அறிக.
 

4. அருளலாவது :எல்லா  உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய
கனிவுள்ளத்தாற் புரியும் செயல்.
 

எ - டு :

உடாஅ போராஅ ஆகுத லறிந்தும்

படாஅம் மஞ்ஞைக் கீத்த வெங்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

(புற-141)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

வடநூலார்  கூறும்  கருணையை  ஒருபுடைஒக்கும்.  இரக்கம் வேறு ; இவ்
அருளல் வேறு என அறிக.
 

5. தன்மையாவது :குணவியல்பும்   குலவியல்பும்  தோன்ற  ஒழுகும்
இயற்கைப் பண்பு.
 

எ - டு :

"வேழம் வீழ்த்த" என்னும் புறப்பாட்டினுள்

கோஎனப் பெயரிய காலை ஆங்கது

தன்பெய ராகலின் நாணி .............

............ பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மென

சுரத்திடை நல்கியோனே

(புறம்-152)
 

எனவரும்.
 

இதன்கண்  வல்வில்  ஓரியின்  தலைமைத்  தன்மையும் வள்ளற்றன்மையும்
புலப்பாடாதல் காண்க.
 

ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக அமைந்தது.
 

"திரை பொரு முந்நீர்" என்னும் புறப்பாட்டினுள்

ஈயென இரத்தலோ அரிதே நீயது

நல்கினும் நல்கா யாயினும் ....

...... ....... ........ ......... ........ ........ ....... ......

கொண்பெருங் கானம் பாடலெமக் கெளிதே

(புறம்-154)
 

இதன்கண் மோசிகீரனாரின்  புலமைத்தன்மை புலப்பாடாதல் காண்க. ஈண்டு
இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமைந்தது.