| பெருமுலை யலைக்கும் காதின் பிணர்மோட்டு |
| உருகெழு செலவின் அஞ்சுவருபேய் மகள் |
(முருகு-50-51) |
என்புழிப் பேய்மகளின் தன்மை புலப்பட்டவாறு காண்க. |
ஈண்டிஃது அச்சத்திற்குப் பொருளாக அமைந்தது. |
| சீரை தைஇய உடுக்கையர் சீரொடு .............. |
| துனியில் காட்சி முனிவர் |
(முருகு-126, 137) |
இதன்கண் முனிவர் தம் தன்மை புலப்படுமாறும் அது மருட்கைக்கும், பெருமிதத்திற்கும் பொருளாக அமையநிற்குமாறும் கண்டு கொள்க. தன்மை எண்வகை மெய்ப்பாட்டிற்கும் பொருளாதற் குரியதாகும். |
6. அடக்கமாவது :செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். |
| எ - டு : | 'கேட்டல் மாத்திரை யல்லது' என்னும் புறப்பாட்டினுள் |
| தன்பெயர் கிளக்குங் காலைத் தன்பெயர் |
| பேதைச் சோழன் என்னும் |
(புறம்-216) |
இதன்கண் கோப்பெருஞ்சோழன் அடக்கம் புலப்படுமாறு காண்க. |
| ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் |
| சான்றோர் பலர்யான் வாழு மூரே |
(புறம்-191) |
என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
7. வரைதலாவது :இன்னது செய்வல் இன்னது தவிர்வல் என நியமித்துக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம். |
| எ - டு : | பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே |
| பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ |
| நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே |
எனவரும். |
8. அன்பாவது :தொடர்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம். |
| எ - டு : | சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது |
| ஆதல் நின்னகத் தடக்கிச் |
| சாதல் நீங்க எமக்கீத் தனையே |
(புறம்-91) |
இதன்கண் கைம்மாறு கருதாத அதியமான் அன்பு புலப்பாடாதல் காண்க. |
| இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் |
| உழவன் யாத்த குழவியின் அகாலாது |
| பாஅல் பைம்பயிர் ஆரும் |
(குறுந்-181) |
எனவும் வரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |