மெய்ப்பாட்டியல்

9. கைம்மிகலாவது : குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல்.
 

எ - டு :

பாலில் குழவி அலறவும் மகளிர்

பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்

வினைபுனை நல்லில் இனைகூக் கேட்பவும்

இன்னாதம்ம ஈங்கினி திருத்தல்

(புறம்-44)
 

இதன்கண்   நெடுங்கிள்ளி   பன்னாள்    அரணடைத்   திருந்தமையான்
மக்கள்துயர் கையிகந்தமையைக் கோவூர்கிழார் புலப்படுத்தியமை காண்க.
 

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்

(குறள்-567)
 

என்பதுமது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

(குறள்-539)
 
இது மகிழ்ச்சி கையிகந்தமை கூறிற்று.
 

10. நலிதலாவது :இடுக்கணுறுதலும்       உறுத்தலுமாம்.      இஃது
தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல்.
 

எ - டு :

குன்றத் திருந்த குரீஇயினம் போல

அம்பு சென்றிருந்த அரும்புண் யானைத்

தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து

நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள

(புறம்-19)
 

இது பிறரால் தான் நலிவுற்றது.
 

மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் தெறித்த

குடப்பால் சில்லுறை போலப்

படைக்கு நோயெல்லாந் தானா யினனே

(புற-276)
 

இது  தன்னான்  பிறர்  நலிவுற்றது.   இஃது   இளிவரலுக்குப்  பொருளாக
அமையும்.
 

11. சூழ்ச்சியாவது : புறநிகழ்ச்சிகளைப்   பற்றி  ஆழ்ந்து  எண்ணுதல்.
சூழ்ச்சி    முடிவு   துணிவெய்தல்   (குறள்-671)    என்பதனான்   இதன்
பொருளுணர்க.
 

எ - டு :

பல்சான் றீரே பல்சான் றீரே

செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே

(புற-246)
 

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி யுறும்

(குறள்-639)
 

என்பதும் அது.
 

இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும்.