290மெய்ப்பாட்டியல்

12. வாழ்த்தலாவது :உலகநலங்    கருதி    இறையையும்    தெய்வ
முதலாயவற்றையும் போற்றுதல்.
 

எ - டு :

வாழி யாதன் வாழி யவினி
நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க

(ஐங்-1)
 

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர் தார்ச்சென்னிக் குளிர்வெண் குடைபோன்றிவ்
அங்கண் உலகளித் தலான்

(சிலம்பு-கடவுள் வாழ்த்து)
 

என வரும். "நமச்சிவாய வாஅழ்க  நாதன்றாள்  வாழ்க" என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

13. நாணலாவது :சான்றோர்      பழிப்பனவற்றை      ஏலாமையும்
புரியாமையுமாம். தன்புகழ்  கேட்டவழி  எய்தும்  மென்மையும்  இதன்கண்
அடங்கும்.
 

எ - டு :

தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன்

(புறம்-65)
 
எனவும
 

வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதுஎன உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே

(புறம்-394)
 
எனவும்
 

............... மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக்கூறி
நின்யான் பிழைத்தது நோவாய், என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே

(புறம்-43)
 

எனவும்
 

தம்புகழ் கேட்டார் போல்தலை  சாய்த்து  மரந்துஞ்ச (கலி-119) எனவும்
வரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

14. துஞ்சலாவது :  செயலூக்கமின்றிப்   புலனொடுங்கிக்    கிடத்தல்.
உறக்கமெனினும் ஒக்கும்.
 

எ - டு :

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்

(புறம்-2)
 
எனவும்
 

நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்

(புறம் 159)
 

எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

15. அரற்றாவது : அறிவொடுபடாது   வெருவுதலும்  உறக்கத்தின்கண்
வாய் சோர்தலுமாம்.