292மெய்ப்பாட்டியல்

எனவும் வரும். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக
அமையும்.
 

19. வெரூஉதலாவது :விரும்பத்தகாதன   கண்டுழியும்   நிகழ்வழியும்
எய்தும் விதிர்ப்பு.
 

எ - டு :

காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்

அதர்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு

மதர்புலி வெரீஇய மையல் வேழத்து

இனந்தலை மயங்கிய நனந்தலைப்

(அக-39)
 

எனவரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.
 

20. மடிமையாவது : செய்தற்குரியவற்றைச்  செய்யாது சோர்ந்திருத்தல்.
அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல்.
 

எ - டு :

அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த

கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்

வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்

(அக-173)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

21. கருதலாவது :ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல்.
 

எ - டு :

ஆஅங்கு, எனைப்பகையும் அறியு நன்ஆய்

எனக்கருதிப் பெயரேத்தி

வாயார நின் இசை நம்பி

சுடர்ச் சுட்ட சுரத்தேகி

இவண்வந்த பெருநசையேம்

(புற-236)
 

எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

22. ஆராய்ச்சியாவது :ஒன்றனது  நலந்தீங்குகளை   நடுவு   நின்று
நோக்கியறிதல்.
 

எ - டு :

கோடு துவையா கோள்வாய் நாயொடு

காடுதேர்ந் தசைஇய வயமான் வேட்டு

வயவர் ..... ...... ....... ...... 

(நற் - 276)
 

எனவரும்.   தேர்தல்   ஆராய்ச்சியின்   பயனாகலின்  இச்   செய்யுளுள்
தேர்ந்தசைஇய என்றதனான் அது பெறப்படும்.
 

தத்தங் கலங்களுள் கையுறை என்றிவற்கு

ஒத்தவை ஆராய்ந்தணிந்தார்

(கலி-84)
 

என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

23. விரைவாவது :காலத்தையும் இடத்தையும்  சுருக்கி  மேற்செல்லக்
கடிதுவிழையும் உள்ள எழுச்சி.