மெய்ப்பாட்டியல்

பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன்

(குறு-292)
 

எனவரும். இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.
 

32. நடுக்கமாவது :துயர்  நேருங்கொல் என்னும் உளக் கலக்கத்தான்
உடம்பு அதிர்தல்.
 

எ - டு :

வெம்மை தண்டா எரியுகு பறந்தலை

கொம்மை வாடிய இயவுள் யானை

நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி

அறுநீ ரம்பியின் நெறிமுதல் உணங்கும்

உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்க ருங்கடன்

(அக-29)
 

எனவரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.
 

இவை  முப்பத்திரண்டும்  இடத்திற்கேற்பப்  பிற  மெய்ப்பாடுகளுக்கும்
பொருளாக வருமென அறிக. உரையாசிரியன்மார் இவற்றிற்கு அகப்பொருள்
பற்றிய  செய்யுட்களையும்   உதாரணமாகக்   காட்டியுள்ளனர்.   ஆசிரியர்
அகத்திணைக்குரிய  பொருள்களை வகுத்து  விதந்து  பின்னர்  ஓதுதலான்
அங்ஙனங் காட்டுதல் மயங்கவைத்தலாம் என்க.
 

சூ. 262 :

புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்

நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு

தகுமுறை நான்கே ஒன்றென மொழிப

(13)
 

க - து : 
 

'மன்னிய  வினைய' (மெய்-19)  எனப்பெறும் அகத்திணைப்பற்றி
நிகழும்     மெய்ப்பாடுகட்குச்    சிறந்துரிமை    பெற்றுவரும்
பொருள்களைத் தொகுத்துக்கூறத்   தொடங்கி, (அகவொழுக்கம்
களவு   கற்பென்னும்   இரு  கைகோளாக  நிகழுமென  மேல்
வகுத்துணர்த்தியமையன்றிக்,    களவின்    பயனும்    கற்பின்
தொடக்கமுமாகிய  வரைதலை  ஆண்டு  ஓரியலாக அமைத்துக்
கூறாமையான்), வரைவுமலிதல், வரைவு  கடாதல் பற்றிக்  கூறிய
கிளவிகளுக்குரிய உணர்வுகள்  விதந்து  கூறும் சிறப்புடையவாக
உள்ளமையான்,   அவற்றை   அழிவில்  கூட்டமாகிய கற்பிற்கு
அடிப்படையாகக் கொண்டு அகத்திணை பற்றிய  மெய்ப்பாட்டுப்
பொருள்களைக்,  களவிற்குரியவை,   அழிவில்  கூட்டத்திற்குக்
காரணமாகிய   வரைவிற்குரியவை,    அழிவில்   கூட்டமாகிய
கற்பிற்குரியவை என அவற்றை மூன்றுவகைப்படுத் ஓதுகின்றார்.
 

அவற்றுள், முதற்கண் களவிற்குரிய  பகுதிகளை  உணர்த்தத் தொடங்கி
ஒன்றியுயர்ந்த  பாலதாணையான்  ஒத்த கிழவனும்  கிழத்தியும்  எதிருற்றுக்
காணும் காட்சியின்கண்  ஐயுற்றுநின்ற  தலைவன்  தலைவிமாட்டு  நிகழும்
"கண்ணே யலமரல்