296மெய்ப்பாட்டியல்

இமைப்பே    அச்சம்"   (கள-4)    என்னுமவற்றான்    ஐயம்    நீங்கி
மெய்தொட்டுப்பயிறல்  முதலாயவற்றை  நிகழ்த்தித்   தலைவியைக்  கூடும்
தெய்வப்   புணர்ச்சிக்கு  முன்னும்  பின்னும்  இருவர்  மாட்டும்  நிகழும்
உணர்வுகளையும் செயல்களையும், களவியலுள்
 

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ வெல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்கா டென்றிச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப, எனவும்

முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்

நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ

அந்நிலை யறிதல் தெளிவகப் படுத்தலென்று

இன்னவை நிகழும் என்மனார் புலவர்

(கள.10)
 

எனவும் கூறியவற்றானும், மெய்தொட்டுப்பயிறல்,  பொய்பாராட்டல் முதலிய
கிளவிகளானும்    புலப்படுத்திய     உணர்வுகளையும்    செயல்களையும்
தொன்னூலார்  மரபு  பற்றி  இருபத்து   நான்கு  பொருள்களாக  வகுத்து
அவற்றை ஆறு   கூறுகளாக்கி   ஓதுகின்றார்.   அவற்றுள்   இச்சூத்திரம்
முதலாங்கூறுபற்றி  வரும்  பொருள் புகுமுகம் புரிதல் முதலாய நான்குமாம்
என்கின்றது.
 

பொருள் : புகுமுகம் புரிதல்,  பொறிநுதல்வியர்த்தல், நகுநய மறைத்தல்
சிதைவு  பிறர்க்கின்மை  என்னும்  தகவாய   முறைமையுடைய   நான்கும்
முதற்கூறு என மொழிவர் ஆசிரியர்.
 

ஒடு எண்ணுப் பொருட்டாய் வந்தது. ஏகாரம் இசைநிறை.
 

1. புகுமுகம் புரிதலாவது :ஒருவர் ஒருவரை நோக்குதற்கண்  ஒருவர்
மற்றொருவர் நோக்கிற்கு உள்ளாதலை விரும்புதல்.
 

நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்

(கள-5)
 

என்றாராகலின்,    ஈண்டு    முகமென்றது   அந்நாட்டத்தினை   என்பது
தெளியப்படும். புரிதல் - விரும்புதல்.
 

எ - டு :

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில

(குறள்-1100)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக வரும்.
 

இது தலைவிக்கே  உரிய  பொருளெனக்  கூறுவர்  பேராசிரியர்.  அது
பொருந்துமாறில்லை.