மெய்ப்பாட்டியல்

கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்

திருநுதற் கில்லை யிடம்

(குறள்-1123)
 

என்பது தலைவன் நோக்கிற் றலைவி புகுந்தது.
 

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து

(குறள்-1127)
 

என்பது தலைவி நோக்கிற் றலைவன் புகுந்தது. பிறவும் சான்றோர் செய்யுள்
நோக்கி அறிந்து கொள்க.
 

2. பொறிநுதல் வியர்த்தலாவது :தலைவன் தன்னை  நோக்கிய வழி
அக்காதல்   வெம்மையான்   உட்கும்   நாணும்   ஓங்குதலின்   தலைவி
வியர்பொறித்த  நுதலினளாதல்.  தலைவற்கு   உட்குத்  தோன்றாதாதலின்
இஃது தலைவிக்கே உரிய பொருள் என  அறிக.  எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. இஃது மருட்கைக்கும் அச்சத்திற்கும் பொருளாக அமையும்.
 

"பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்

உறுவளி யாற்றச் சிறுவரை திறவென"

(அக-136)
 

என்பது கற்பிற்குறித்தாகலின் ஈண்டைக்கு ஏலாதென்க.
 

3. நகுநய மறைத்தலாவது :தலைவி தன்  காதலை  வெளிப்படுத்தும்
உள்ளுணர்வாற்றோன்றும்  முறுவலை   மறைத்தல்.   நயம்  -  விருப்பம்.
நயநகை  என்பது  முன்பின்னாக  மாறி  ஒருசொல்நீர்மைத்தாய்   நின்றது.
இதுவும் தலைமகட்கே உரியதாகும்.
 

எ - டு :

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

(குறள்-1274)
 

இது பெருமிதத்திற்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.
 

4. சிதைவு பிறர்க்கின்மையாவது :நகுநயம்    மறைத்த     வழியும்
தலைவனது   குறிப்பானும்  செயலானும்  கிளர்ந்தெழும்   காதலுணர்வான்
எய்தும்   உள்ளச்   சிதைவினைப்  புறத்தார்க்குப்   புலப்படா  வண்ணம்
தலைவி தன் நெஞ்சினை நிறுத்துதல். பிறர் என்றது  ஈண்டுத்  தலைவனும்
ஆயமுமாம்.
 

எ - டு :

கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்க லுறுவதொன் றுண்டு

(குறள்-1271)
 

எனத் தலைவன் கூறுதலான் தலைவி உளஞ்சிதைந்தவாறும்  அவளதை
மறைக்கலுற்றவாறும்  கண்டு  கொள்க. இஃது  இளிவரலுக்குப்  பொருளாக
அமையும்.