302மெய்ப்பாட்டியல்

தலைவியின்   பண்பு   முதலியவற்றைப்   புனைந்து   தனது   மீளா
வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல்  என்னாது பாராட்டு
எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும்
 

காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்

நாணு மடனும் பெண்மைய வாகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயி னான

(கள-18)
 

என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே
நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்பட நிகழும் என்க.
 

எ - டு :

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோ நீஅறியும் பூவே

(குறு-2)
 

என்பது தலைவன் தலைவியைப் பாராட்டியது.
 

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே

(குறு-3)
 

என்பது  தலைவி  பின்னொரு  காலத்துத்  தோழியிடத்துத்  தலைவனைப்
பாராட்டிய  பாராட்டு.  இந்நுட்பந் தோன்றப்  பாராட்டுரைத்தல்  என்னாது
பாராட்டு எடுத்தல்  என்றார் என அறிக. இஃது  உவகைக்குப்  பொருளாக
அமையும்.
 

2. மடந்தப உரைத்தலாவது :பெதும்பைப்  பருவத்து  முற்றி  நின்ற
மடப்பம்   சிறிது   நீங்கத்   தலைவி   அளவோடு  பேசுதலாம்.   மடம்
பெண்மைக்குரிய குணனாகலான் இது தலைவற்குரித்தன்மை புலப்படும். இது
பெரும்பான்மையும் தலைவிக்குத் தோழியை நோக்கியதாக நிகழும்.
 

எ - டு :

அன்னாய் வாழி வேண்டன்னை என்னை

தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின

பொன்வீ மணியரும் பினவே

என்ன மரம்கொல் அவர்சா ரலவ்வே

(ஐங்-20)
 

இதன்கண் தலைவி செவிலிக்குத் தன் களவொழுக்கத்தைப் புலப்படுத்துமாறு
தோழியிடம் கூறும் மடனழிவு கண்டு கொள்க.