மெய்ப்பாட்டியல்

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்

தனிக்குரு குறங்குந் துறைவற்கு

இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே

(ஐங்-144)
 

இதன்கண் தலைவற்கு வரைவு கடாதல் முகத்தான் தலைவி  கூறி மடனழிய
நின்றவாறு கண்டு கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

3. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலாவது :  நாற்றமும்   தோற்றமும்
ஒழுக்கமும் உண்டியும் மாறுபட்டமையானும் அறிமடம் நீங்கிய உரையானும்
தலைவியைச் செவிலியும் நற்றாயும்  ஐயுற்றவழிக்  கூறும்  கடுஞ்சொற்களை
மறாது  ஏற்றுப் புறத்தார்க்கு  இது  புலனாங்கொல்  எனக்  கருதித்தலைவி
நாணுதல்.
 

இனி, நசையிலாப்  பழிச்சொற்களை ஏற்றிக் கூறும்  அம்பல்  மகளிரின்
அலருக்கு நாணுதல் எனப்பொருள் கோடலுமாம். இப் பொருட்கு "ஏற்றலர்"
என்பது வினைத்தொகை மொழியாகும்.
 

எ - டு :

யானே ஈண்டைய னேஎன் னலனே

ஆனா நோயொடு கான லஃதே

துறைவன் தம்மூ ரானே

மறைய லராகி மன்றத் தஃதே.

(குறு-97)
 

எனவும்
 

கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி

அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்

சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே

வாய்க்கதில் வாழி தோழி .....

(அக-347)
 

எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கொடுப்பவை கோடலாவது :   தலைவனாற்    கொடுக்கப்பெறும்
தழையும்   கண்ணியும்   தாரும்    மாலையும்   ஆகிய   கையுறைகளை
ஏற்றுக்கோடல்.
 

எ - டு :

பெரும்புலர் விடியலின் விரும்பப் போத்தந்து

தழையுந் தாரும் தந்தனள் இவன்என

இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்

தைத்திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள் .....

(நற்-80)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

"எடுத்த" என்றதனான் கொடுப்பவை கோடற்குத்  தடுமாறலும் இதன்கண்
அடங்குமெனக்  கொள்க.   அவ்வழி  அஃது  அச்சத்திற்குப்  பொருளாக
அமையும்.